/* */

தமிழ்நாடு நம்பர் 1 ஆக வேண்டும் -அதிகாரிகள் மாநாட்டில் முதல்வர் வேண்டுகோள்

மாவட்ட ஆட்சியர்கள்/எஸ்.பிக்கள்/ வனத்துறை அதிகாரிகள் மாநாடு முதல்வர் தலைமையில் நடைபெற்றது.

HIGHLIGHTS

தமிழ்நாடு நம்பர் 1 ஆக வேண்டும் -அதிகாரிகள் மாநாட்டில் முதல்வர் வேண்டுகோள்
X

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல் துறை மற்றும் வனத் துறை அலுவலர்கள் மாநாட்டின் முதல் நாள் கூட்டம், இன்று (10-3-2022) காலை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


முதலில், மாநாட்டிற்கு வருகை புரிந்தோரை தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்புவரவேற்றுப் பேசினார். பின்னர், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமை உரை ஆற்றினார், அவர் கூறியதாவது:

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இந்தப் புதிய அரசு அமைந்த பிறகு நடைபெறக்கூடிய முதலாவது மாவட்ட ஆட்சியர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள், மாவட்ட வனத்துறை அதிகாரிகள் மாநாடு, இந்த மாநாடு. எனவே, உங்கள் அனைவரையும் ஒருசேர இந்த மாநாட்டின் மூலமாகச் சந்திப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த அரசு பொறுப்பேற்று பத்து மாதங்கள் ஆகியிருக்கின்றன. இரண்டு கொரோனா அலைகளை வெற்றிகரமாக எதிர்கொண்டு அதற்கு முற்றுப்புள்ளியும் வைத்திருக்கிறோம்! அதற்கு உங்களுடைய ஒத்துழைப்புதான் முக்கியமான காரணமாக அமைந்தது. ஊரடங்கைச் செயல்படுத்துவது; மக்களின் வாழ்வாதரமும் அடிப்படைத் தேவைகளும் பாதிக்காத வகையிலே, அரசு எடுத்த நடவடிக்கைகளை, மாவட்ட நிர்வாகம் சிறப்பாகச் செயல்படுத்தியிருக்கிறது. தடுப்பூசி செலுத்துவது எனும் மாபெரும் மக்கள் இயக்கம்' வெற்றிகாணக்கூடிய அளவிலே உழைத்தது நீங்கள் என்பதை எண்ணிப் பார்க்கிறபோது, நீங்கள் அளித்த உழைப்பு மெச்சத்தக்கது - பாராட்டுக்குரியது. வரலாறு காணாத கனமழையால் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப் பாதிப்புகள் ஏற்பட்டபோது, அந்தந்த மாவட்ட நிர்வாகத்தைச் சார்ந்தவர்களும் இரவு பகல் பாராது பணியாற்றியிருக்கிறீர்கள். இவற்றுக்கெல்லாம் பாராட்டுகளை மனதாரத் தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் பொறுப்பேற்றபோது மாநில நிர்வாகம் எந்த நிலையில் இருந்தது என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும்.

சவால்கள் ஒருபக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கத்தில் மாபெரும் பல சாதனைகளையும் நாம் செய்திருக்கிறோம். நேர்மையான, வெளிப்படையான, மக்கள் விரும்புகின்ற அரசு நிர்வாகத்தை நாம் அனைவரும் இணைந்து அளித்து வருகிறோம். நீங்களும் இந்தப் பணியிலே பங்குதாரர்களாக இருந்திருக்கிறீர்கள் என்ற முறையில், என்னுடைய பாராட்டுக்களை மீண்டும் மீண்டும் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன். ஐந்நூற்றுக்கும் அதிகமான வாக்குறுதிகளை பொதுமக்களுக்கு நாங்கள் வழங்கியிருக்கிறோம். அவற்றுள் 70 விழுக்காட்டிற்கும் அதிகமான வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளில் தற்போது ஈடுபட்டு இருக்கிறோம்.

'ஸ்டாலினின் 7 உறுதிமொழிகள்' என்று ஏழு தொலைநோக்குக் குறிக்கோள்களை அறிவித்தோம். அவற்றுக்கான செயல்திட்டங்களையும் வகுத்து நிறைவேற்றி வருகிறோம். அந்தக் குறிக்கோள்களை அடைய மாநிலப் பொருளாதார ஆலோசனைக் குழுவை அமைத்தோம்; மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவை உருவாக்கினோம்; நிதி நுட்பக் கொள்கையை வகுத்தோம்; ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கையை உருவாக்கினோம்; தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கையை வெளியிட்டோம்; வேளாண்மைக்கு எனத் தனி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தோம்; கொள்கை அரசையும் மக்கள் நல சேவை அரசையும் ஒருசேர நடத்த வேண்டுமென்ற இலட்சியத்தை வகுத்தோம்.

இப்படி, இந்த 'திராவிட மாடல்' அரசின் முன்னுரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அரசு நிர்வாகச் சக்கரத்தைச் சரியான திசையில், மக்கள் பயனடைக்கூடிய திசையிலே திருப்பினோம்.

இந்தியாவுக்கே முன்னோடித் திட்டங்களாக விளங்கக்கூடிய

• 'மக்களைத் தேடி மருத்துவம்'

'இல்லம் தேடிக் கல்வி'

இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48' இப்படி மக்கள் நலனுக்காக நாம் தீட்டியுள்ள அனைத்துத் திட்டங்களும் கடைகோடியில் வாழக்கூடிய மனிதரையும் சென்றடையத் தேவையான நடவடிக்கைகளை இந்தப் பத்து மாதங்களில் எடுத்து தமிழ்நாட்டின் நிர்வாகத்தை இந்திய அளவிலே தலைநிமிரச் செய்திருக்கிறோம். அதற்கு அதிகாரிகளாகிய நீங்கள் அளித்த ஒத்துழைப்புக்கு மீண்டும் பாராட்டுகளை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

மாவட்ட ஆட்சித்தலைவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருடன் முதன்முறையாக மாவட்ட வன அதிகாரிகளையும் இணைத்து ஒருங்கிணைந்த மாநாடாக இந்த மாநாடு நடைபெறவிருக்கிறது. இதனுடைய முக்கிய நோக்கம், இன்று உள்ள காலநிலை மாற்றம் ! மனித சமுதாயத்தின்

வளர்ச்சியில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்குத்தான் இந்த ஒருங்கிணைந்த மாநாடு நடத்தப்படுகிறது. இத்தகைய மாற்றம் வர வேண்டும் என்பதற்காகத்தான் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை என்று பெயர் சூட்டியிருக்கிறோம். தமிழ்நாட்டைப் பசுமை நிறைந்த மாநிலமாக மாற்றுவதற்கு இதுவொரு மிக முக்கியமான முன்னெடுப்பு. தற்போது நமது தமிழ்நாட்டில் 24 விழுக்காடாக இருக்கும் மொத்த பசுமைப் பரப்பினை குறைந்தபட்சம் 33 விழுக்காடாக 10 ஆண்டுக்குள் உயர்த்திட வேண்டும். இந்த இலக்கை அடைய ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாகமும் இணைந்து ஒரே திசையில் பயணிக்க வேண்டும்.

புதிய முதலீடுகள் வருவதற்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைப்பதற்கும், அதன் வழியாக நாம் விரும்பும் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் எனும் இலக்கினை அடைந்து மாநிலத்தின் முன்னேற்றத்தை உறுதிசெய்யவும் சட்டம் ஒழுங்கு மிக மிக முக்கியமாகும்! தமிழ்நாட்டில் எப்போதும் சட்டம், ஒழுங்கு சீராக இருப்பதை மாவட்ட நிர்வாகம் ஒருங்கிணைந்து கண்காணிக்க வேண்டும் ! சட்டம் ஒழுங்கு விஷயத்திலே நான் சமரசம் செய்துகொள்ள மாட்டேன். அதை நீங்கள் அனைவரும் உணர்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், போதைப் பொருள் குற்றங்கள், பொருளாதாரக் குற்றங்களை இந்த அரசு ஒருபோதும் அனுமதிக்காது. மத நல்லிணக்கத்திற்கு ஊறுவிளைவிக்கக்கூடிய வகையில் யார் செயல்பட்டாலும், அவர்கள் மீது தயவுதாட்சண்யமின்றி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சமுதாயத்தில் அமைதி நிலவுவதை உறுதிசெய்திடக்கூடிய வகையில் சாதி மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் மிகுந்த கவனத்துடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் காவல்துறை ஈடுபட்டு வருகிறது. நாசகார சக்திகள் எந்த வடிவிலும் தலைதூக்க நாம் அனுமதித்துவிடக் கூடாது. எல்லோரும் ஓரினம் எல்லோரும் ஓர் குலம் என்ற சமத்துவ சமூகமே - நமது அரசினுடைய குறிக்கோள் என்று தமது உரையில் குறிப்பிட்டார்.

Updated On: 10 March 2022 8:05 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நாமக்கல்
    ப.வேலூர் டவுன் பஞ்சாயத்து சார்பில் பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல்...
  3. நாமக்கல்
    கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.17 கோடி மோசடி: செயலாளர் உட்பட 2 பேர் கைது
  4. குமாரபாளையம்
    குமாரபாளையம் விநாயகர், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
  5. ஈரோடு
    கொளுத்தும் கோடை வெயில்: ஈரோட்டில் நேற்று 108.32 டிகிரி வெயில் பதிவு
  6. காஞ்சிபுரம்
    விடாமுயற்சியும் தன்னம்பிக்கைக்கு உதாரணமாக திகழ்கிறது நிலவொளிப் பள்ளி -...
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. திருத்தணி
    திருத்தணி அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் உயிரிழப்பு
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. வீடியோ
    களம் இறங்கிய NSG Commandos | அலறும் மம்தாவின் Trinamool Congress |...