/* */

எம்.ஜி.ஆரா? கேள்விப்பட்டிருக்கிறேன்: ஷாக் கொடுத்த காவலர்

எம்.ஜி.ஆர்., கொண்டாடிய ஒரு நேர்மையான காவலரின் பெருமையை பற்றி பார்க்கலாம்

HIGHLIGHTS

எம்.ஜி.ஆரா? கேள்விப்பட்டிருக்கிறேன்: ஷாக் கொடுத்த காவலர்
X

ஒரு கார்த்திகை மாதத்து கும்மிருட்டு! செங்கல்பட்டிலிருந்து படப்பிடிப்பை முடித்துக்கொண்டு எம்ஜிஆர், நள்ளிரவு பன்னிரெண்டு மணிவாக்கில் காரில் சென்னை வந்து கொண்டிருக்கிறார். வழியில் பேருந்துக்காக காத்திருந்த காவல் உடையில் நின்ற ஒருவரைப் பார்க்கிறார். ஆள் நடமாட்டமே இல்லாத இந்த அர்த்த ராத்திரியில், அந்த காவலர் பேருந்துக்காக காத்து நிற்கிறார் என்பதை புரிந்து கொள்கிறார்.

உடனே கார் டிரைவரிடம் காரை நிறுத்தச்சொல்லி காவலரிடம் "ஏறுங்கள், எங்கே போக வேண்டும்" என்கிறார். அதற்கு அந்த காவலர் "பரவாயில்லை. நான் பேருந்திலேயே வந்து விடுகிறேன்" என்கிறார். பதிலுக்கு எம்.ஜி.ஆர்., இப்போதே இரவு நீண்ட நேரம் ஆகிவிட்டது. இனி இந்த ரூட்டில் பேருந்து கிடையாது. ஏறிக்கொள்ளுங்கள்" என்று கட்டாயப்படுத்திய பின்னர் அந்த காவலர் வேண்டா வெறுப்பாக ஏறுகிறார்.

காரில் லைட்டைப் போட்டு, எம்.ஜி.ஆர்., "சாப்பிட்டீங்களா?" என்று கேட்டுக்கொண்டே, சீட்டுக்கு பின்னால் இருந்த பிஸ்கட், பழங்களை எடுத்து காவலரிடம் கொடுக்கிறார். "இப்படி ஓசியில் பயணம் செய்வதே எனக்கு உடன்பாடில்லை. இன்னும் நீங்கள் உண்ணச் சொல்லி வேறு என்னை இழிவுபடுத்தாதீர்கள்" என்று மறுக்கிறார்.

பொன்மனச் செம்மல் பூரிக்கிறார். சாதாரண பொறுப்பில் இருக்கும் இந்த காவலரின் நேர்மை, பொன்மனச்செம்மலை சிலிர்க்க வைத்து விட்டது. "நான் தான் எம்.ஜி.ஆர்" என போலீஸ்காரரிடம் தெரிவித்தார். அதற்கு போலீஸ்காரர் "கேள்விப்பட்டிருக்கிறேன்" என்றார். பொன்மனச் செம்மலின் முகத்தில் கோபம் இல்லை. பதிலுக்கு புன்முறுவல் மலர்கிறது.

"என் படங்களைப் பார்த்து இருக்கிறீர்களா?" என கேட்கிறார். பதிலுக்கு போலீஸ்காரர் "நான் சினிமாவே பார்ப்பதில்லை'' என அளித்த பதிலால் புரட்சித்தலைவர் இன்னும் பிரமிக்கிறார். இப்பொழுது கார் சத்தத்தைத் தவிர ஒரே நிசப்தம். காவலர் தனது வீட்டிற்கு அரை கிலோமீட்டர் தூரத்துக்கு முன்பே காரை நிறுத்தச்சொல்லி, "இங்கேயே இறங்கிக் கொள்கிறேன்"என்கிறார்.

"ஏன் நீங்கள் குறிப்பிட்ட அந்த விலாசம் இன்னும் அரை கிலோ மீட்டர் தூரம் இருக்கிறதே"

"சாதாரண காவல்துறை த்தியோகத்தில் இருக்கும் நான் காரில் வந்து இறங்கினால்: என் வீட்டிற்கு அருகில் உள்ளவர்கள் என்னைத் தவறாக நினைத்துக்கொள்வார்கள். இதுவரை இப்படி நான் யார் காரிலும் ஓசியில் வந்த பழக்கமில்லை. நீங்கள் இவ்வளவு தூரம் செய்த உபகாரத்திற்கு நன்றி." எம்ஜிஆர் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.

அடுத்த நாள் காவல்நிலையத்திற்கு போன் செய்து" நான் எம்.ஜி.ஆர். பேசுகிறேன்" என்கிறார். இரவு சந்தித்த காவலரைபற்றி விசாரிக்கிறார். எம்.ஜி.ஆரிடம் அந்த பகுதி டி.எஸ்.பி. இவரை பற்றி சொல்கிறார். "நீங்கள் குறிப்பிடும் அவர் இன்று விடுப்பில் இருக்கிறார். அவர் கையூட்டு வாங்காதவர். கடமை தவறாதவர். காவல் துறையின் நேர்மைக்கு இவரே இலக்கணம். வெற்றிலை பாக்கு, பீடி, சிகரெட் போன்ற லாகிரி வஸ்தோ, நாடகம், சினிமா போன்ற பொழுது போக்கு அம்சங்களெல்லாம் இவர் அறியாதவர். கல்யாண வயதில் உள்ள மூன்று பெண்களையும், கரை சேர்க்க முடியாமல் கஷ்டத்தில் இருக்கிறார்' என்கிற விபரங்கள் அனைத்தும் டி.எஸ்.பியால் சொல்லப்படுகிறது.

மறுநாள் அந்தக் காவலர் ராமாவரம் தோட்டத்திற்கு அழைத்து வரப்படுகிறார். அவரிடம் பேப்பரில் மடித்த பெரிய பணக்கட்டை கொடுத்து "இதை வைத்து உங்கள் பெண்களின் கல்யாணத்தை நடத்துங்கள்" என்கிறார் எம்ஜிஆர். காவலரோ பணத்தை வாங்க மறுக்கிறார். "நான் ஏதாவது உங்களிடம் காரியமாற்றச் சொல்லி அதற்காக கொடுத்தால், அது தவறு. என்னால் ஆக வேண்டியது உங்களுக்கும், உங்களால் ஆக வேண்டியது எனக்கும், ஏதும் இல்லை. நான் உங்கள், கூடப் பிறந்த ஒரு சகோதரனாக நினைத்துக் கொடுக்கிறேன். பெற்றுக்கொள்ளுங்கள்" என்று சொன்ன பிறகு, கேட்டும் கூட கிள்ளிக்கொடுக்காத கனவான்கள் வாழும் இந்த உலகில், ரோட்டில் நின்றவனை அழைத்துச் சென்று அள்ளிக் கொடுத்த எம்ஜிஆரின் கருணையில், நெகிழ்ந்து போய் பெற்றுக் கொள்கிறார் போலீஸ்காரர்.

பிறகொரு தேதியில் புரட்சித்தலைவரே சென்று, அந்த காவலரின் மூன்று பெண்களின் திருமணத்தையும் நடத்தி வைத்து, வாழ்த்தி இருக்கிறார்.

"வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி

மக்களின் மனதில் நிற்பவர் யார்

மாபெரும் வீரர் மானம் காப்போர்

சரித்திரம் தனிலே நிற்கின்றார்."

Updated On: 24 Nov 2022 4:29 AM GMT

Related News

Latest News

  1. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  2. வீடியோ
    Muslim என்று மோடி சொன்னாரா ? கொந்தளித்த இராம ஸ்ரீனிவாசன் !#muslim...
  3. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  4. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  5. கோவை மாநகர்
    விபத்தில் மரணமடைந்த பாஜக நிர்வாகி ; வானதி சீனிவாசன் அஞ்சலி
  6. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற டேங்கர் லாரி
  7. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
  8. தமிழ்நாடு
    சதுப்பு நிலம் அடையாளம் காணும் பணி துவக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட்...
  9. காஞ்சிபுரம்
    சுடுகாடு எங்கே ? தேடி அலைந்த இருளர் குடியிருப்பு வாசிகள்!
  10. காஞ்சிபுரம்
    உள்துறை அமைச்சர் பதவிக்கு தகுதியற்றவர் ஸ்டாலின் - ஜெயக்குமார்!