/* */

பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்

பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னையில் நாளை  போக்குவரத்து மாற்றம்
X

பிரதமர் மோடி நாளை சென்னைக்கு வருகை தரும் நிலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதியம் 3 மணி முதல் மாலை 8 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதைகளில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் சென்னையில் நாளை தொடங்கி 31ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இந்த போட்டிகளில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். 'கேலோ இந்தியா' விளையாட்டுப் போட்டிகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதற்காக பெங்களூரில் இருந்து தனி விமானத்தில் நாளை மாலை 4.50 மணிக்கு பிரதமர் மோடி சென்னை வருகிறார்.

பிரதமர் மோடியின் வருகையையொட்டி சென்னையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையில் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சென்னையில் உள்ள முக்கிய ரயில் நிலையங்கள், பேருந்து முனையங்களிலும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும், பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பாரதப் பிரதமர் அவர்கள் 19.01.2024 அன்று நேரு வெளிப்புற விளையாட்டு அரங்கில் நடைபெறும் "கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு" தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக சென்னை வரவுள்ளார், இந்த விழாவில் தமிழக ஆளுநர், முதலமைச்சர், தமிழகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் விழாவில் பங்கேற்க உள்ளனர். பிரதமரின் சென்னை வருகையின் போது விழா நடைபெறும் இடங்களைச் சுற்றியுள்ள சாலைகள், ஐஎன்எஸ் அடையாறு முதல் நேரு வெளி விளையாட்டு அரங்கம், நேரு உள் விளையாட்டு அரங்கம் முதல் ராஜ்பவன் வரை பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக சாலைப் பயணிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

பிரதமரின் வருகையையொட்டியும் விழா நடைபெறும் இடம் மற்றும் அதைச் சுற்றி உள்ள சாலைகளில் குறிப்பாக ஈ.வே.ரா சாலை, தாஸ்பிரகாஷ் முதல் சென்னை மருத்துவ கல்லூரி சந்திப்பு வரை போக்குவரத்து சிறிதளவு நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பொதுவாக அண்ணாசாலை, எஸ் வி. பட்டேல் சாலை மற்றும் ஜிஎஸ்டி சாலைகளில் போக்குவரத்து மெதுவாக இருக்கும், ஆகையால் வாகன ஓட்டிகள் தங்களது பயணத்தை இந்த சாலைகளை தவிர்த்து மாற்று வழியில் செல்ல திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் வணிக வாகனங்களுக்கு மதியம் 3 மணி முதல் மாலை 8 மணி வரை இடையே மாற்று வழிதடங்களில் செல்ல கீழ்கண்டவாறு நடைமுறைபடுத்தப்படும்.

அண்ணா ஆர்ச் முதல் முத்துசாமி சாலை சந்திப்பு வரை இரு திசைகளிலும் வணிக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது. பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வரும் வாகனங்கள் அண்ணா ஆர்ச்சில் திரும்பி அண்ணா நகர் வழியாக புதிய ஆவடி சாலையில் திருப்பி விடப்படும். வட சென்னையில் இருந்து பாரிமுனை நோக்கி வரும் வாகனங்கள் என்.ஆர்.டி புதிய பாலத்தில் இருந்து திருப்பி விடப்பட்டு ஸ்டான்லி சுற்றி மின்ட் சந்திப்பு, மூலக்கொத்தளம் சந்திப்பு, பேசின் பிரிட்ஜ் டாப் மற்றும் வியாசர்பாடி வழியாக திருப்பி விடப்படும். ஹண்டர்ஸ் சாலையில் இருந்து வரும் வணிக வாகனங்கள் ஹான்டர்ஸ் ரோடு ஈ.வி.கே சம்பத் சாலை வழியாக ஈவிஆர் சாலையை நோக்கி திருப்பி விடப்பட்டு நாயர் பாயிண்ட்(டாக்டர் அழகப்பா சாலை X ஈவிஆர் சாலையை சந்திப்பு) வழியாக சென்றடையலாம். எனவே வாகன ஓட்டிகள் தங்கள் இலக்கை அடைய அதற்கேற்ப பயணத்தை திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Updated On: 18 Jan 2024 12:13 PM GMT

Related News