/* */

அரசுக்கு எதிராக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அறிக்கை

திமுக அரசுக்கு எதிராக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

HIGHLIGHTS

அரசுக்கு எதிராக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அறிக்கை
X

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்.

அரசு மருத்துவப் பணிக்கு தமிழ்வழிக் கல்விக்கான 20 விழுக்காடு இட ஒதுக்கீடு மறுப்பு என்பது சமூக நீதிக்கு எதிரானது என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வேல் முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் 20 விழுக்காடு ஒதுக்கீடு வழங்கும் நடைமுறை கடந்த 2010ல் அமல்படுத்தப்பட்டது. இந்த ஒதுக்கீட்டின் வாயிலாக, தமிழ்நாட்டு மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்காக 1021 மருத்துவர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பை, கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11 ஆம் நாள் தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.

அதில், 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், 178 இடங்கள் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், இந்த இட ஒதுக்கீட்டின் கீழ் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு தகுதியானவர்கள் இல்லை என கூறி, அந்த இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படுவதாக மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருப்பது வன்மையாக கண்டத்துக்குரியது.

தமிழ்நாட்டில் அரசு வேலைவாய்ப்புகளில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தின்படி, அரசுப் பணிக்கான அடிப்படைத் தகுதி பட்டப்படிப்பு என்றால் அதை மட்டும் தமிழ்வழியில் படித்தால் போதுமானது என்பதால், அவ்வசதியை ஆங்கில வழியில் படித்த பலரும் தவறாக பயன்படுத்தி வந்தனர். இதனையடுத்து, பள்ளிக்கல்வி முதல் கல்லூரிக் கல்வி வரை அனைத்து நிலைகளிலும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வழங்க வகை செய்யும் சட்ட திருத்தம் கடந்த 2020ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ளது. அச்சட்டத்தின் அடிப்படையில், பள்ளிக் கல்வியையும், உயர் கல்வியையும் தமிழில் நிறைவு செய்தவர்களுக்கு மட்டுமே தமிழ்வழிக் கல்விக்கான இடஒதுக்கீடு வழங்கப்படும் வேண்டும்.

ஆனால், தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பு ஆங்கில வழியில் மட்டும் தான் கற்பிக்கப்படுகிறது; தமிழ்வழியில் கற்பிக்கப் படவில்லை என்ற அடிப்படை கள எதார்த்தத்தை உணராமல், மருத்துவப் படிப்பை தமிழில் படிக்கவில்லை என்று கூறி, மருத்துவர் பணி நியமனத்தில் தமிழ்வழிக் கல்விக்கான இட ஒதுக்கீடு மறுக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசின் அரசின் இந்த நிலைப்பாடு முற்றிலும் தவறானது. இது தமிழ்வழிக் கல்வி இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டதன் நோக்கத்திற்கு முழுக்க முழுக்க எதிரானது. இந்தியாவிற்கே இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் வழிகாட்டி மாநிலமாக இருந்த தமிழ்நாட்டில் இவ்வாறு தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது எந்த வகையிலும் ஏற்கக் கூடியது அல்ல. மேலும், தமிழ்நாட்டில் இயங்கும் தன் நிதி மருத்துவக் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு கிடையாது. பணத்தை பெருந்தொகையில் வாரிக் கொடுத்து பட்டம் வாங்கும் நிலையங்களாக அவை உள்ளன. ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்கள், ஏழைகள் ஆகியோருக்கு அக்கல்லூரிகளில் இடம் கிடைப்பதில்லை, தவிரவும் இக்கல்லூரிகளில் மிகப் பெரும் எண்ணிக்கையில் வெளி மாநில மாணவர்கள் இடம்பிடித்து விடுகின்றனர்.

தமிழ்வழிக் கல்வி இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டதன் நோக்கமே, பள்ளிகளிலும்,கல்லூரிகளிலும் தமிழ்வழிக் கல்வியை ஊக்குவிக்க வேண்டும் என்பது தான். மருத்துவப் படிப்பும், பட்ட மேற்படிப்பும் தமிழ் வழியில் இருந்திருந்தால், பள்ளிக்கல்வியை தமிழில் படித்தவர்கள், அவற்றையும் தமிழ்வழியில் தான் படித்திருப்பார்கள். அந்தப் படிப்புகள் தமிழ் வழியில் நடத்தப்படாதது அரசின் தவறே தவிர, மாணவர்களின் தவறல்ல. இத்தகைய சூழலில், எந்த அளவுக்கு தமிழ் வழியில் படிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளனவோ, அந்த அளவுக்கு தமிழ்வழியில் படித்தவர்களுக்கு தமிழ்வழிக் கல்விக்கான இட ஒதுக்கீட்டை வழங்குவது தான் சரியானதாகவும், சமூகநீதியாகவும் இருக்கும்.மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அந்த இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப் படிப்பில் சேருபவர்களில் 90 விழுக்காடு பேர் தமிழ்வழியில் படித்தவர்கள். அவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்வழிக் கல்விக்கான இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டியது அவசியம். 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், 178 இடங்கள் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசு மருத்துவப் பணி வழங்க மறுப்பது, வர்ண - சாதி வழிப்பட்ட சமூக அநீதியை நிலை நாட்டும் கொடுஞ்செயலாகும்.

எனவே, மருத்துவப் படிப்பு, பட்ட மேற்படிப்பு போன்ற ஆங்கிலவழியில் மட்டும் கற்பிக்கப்படும் படிப்புகளை கல்வித்தகுதியாகக் கொண்ட பணிகளுக்கு, தமிழ்வழிக் கல்விக்கான 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும். அதற்கேற்ப, எதிர் வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில், தமிழ்வழிக் கல்விக்கான 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டு சட்டத்தில் தமிழ்நாடு அரசு திருத்தம் செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Updated On: 8 Feb 2024 5:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வானத்து சல்லடையில் மேகம் ஊற்றிய நீர், மழை..!
  2. அரசியல்
    5 ஆண்டுகள் தூங்கிய ஜெகன் அண்ணனை வறுத்தெடுத்த தங்கை..!
  3. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3வது நாளாக 82 கன அடியாக நீடிப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    ரமலான் காலத்தில் உடல் பலமும், மன வலிமையும்
  5. பட்டுக்கோட்டை
    வயலில் பாசி படர்ந்தால் நெல் எப்படி சுவாசிக்கும்? எப்படி சத்துக்களை...
  6. லைஃப்ஸ்டைல்
    கஷ்டங்கள் யாவும் கடந்து போகும்.. தோல்வியா? தூசிதான்!
  7. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 173 கன அடியாக அதிகரிப்பு
  8. ஈரோடு
    ஈங்கூர் இந்துஸ்தான் கல்லூரியில் மாநில கைப்பந்து முகாம் நிறைவு விழா
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் பொதுமக்களுக்கு இலவசமாக மோர் வழங்கிய போலீசார்
  10. வீடியோ
    🔥உனக்கு 24-மணிநேரம்தான் Time விஜயபாஸ்கர் மிரட்டல்🔥|மோதிக்கொண்ட...