/* */

ஒடிசா ரயில் விபத்து: பாலசோரிலிருந்து இன்று சென்னைக்கு வந்தடைந்த சிறப்பு ரயில்

ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய 700 பயணிகளுடன் சிறப்பு ரயில் இன்று சென்னைக்கு வந்தடைந்தது.

HIGHLIGHTS

ஒடிசா ரயில் விபத்து: பாலசோரிலிருந்து இன்று சென்னைக்கு வந்தடைந்த சிறப்பு ரயில்
X

சென்னை வந்தடைந்த சிறப்பு ரயில்.

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் நிலையத்தில் மூன்று தனித்தனி தடங்களில் பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகிய மூன்று ரயில்களும் விபத்துக்குள்ளானது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை நடந்த விபத்தில் இந்த இரண்டு பயணிகள் ரயில்களின் 17 பெட்டிகள் தடம் புரண்டு பலத்த சேதமடைந்தன.

இந்த விபத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 288 ஆகவும், படுகாயமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,000 பேர் என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்த 1,175 பயணிகள் பல்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் 793 பேர் சிகிச்சைக்குப் பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது, 382 பயணிகள் பல்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று பிரதமர் நரேந்திர மோடி, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோருடன் விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்தனர். இதனைத்தொடர்ந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

இந்த நிலையில், பாலசோரிலிருந்து சுமார் 700 பயணிகளுடன் சிறப்பு ரயில் இன்று சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடைந்தது.

தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் எம் சுப்பிரமணியம் பாதிக்கப்பட்டவர்களை நிலையத்தில் வரவேற்றார்.

ஒடிசா ரயில் விபத்தில் இருந்து மீட்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகளுடன், சிறப்பு ரயில் காலை 4.30 மணியளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தது. உடன் தமிழ்நாடு பேரிடர் மீட்புக் குழு, போலீஸ் அதிகாரிகள் மற்றும் கமாண்டோக்கள் இருந்தனர்.

மேலும், தமிழ்நாடு போக்குவரத்து துறை சார்பில் 10 பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், 10க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் மருத்துவமனைகளுக்கு செல்ல தயாராக உள்ளது. இதற்காக ஃபாஸ்ட்ராக் டாக்சி நிறுவனம் 50க்கும் மேற்பட்ட வாகனங்களை இலவசமாக அனுப்பியுள்ளது.

சிறப்பு ரயிலில் வரும் பயணிகளுக்காக சிறப்பு மருத்துவக் குழுவும் ரயில் நிலையத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பல சிறப்பு மருத்துவர்களின் ஆறு குழுக்கள் இங்கு உள்ளன. மொத்தம் 700 பயணிகளில் 293 பயணிகள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.

Updated On: 5 Jun 2023 8:05 AM GMT

Related News