/* */

புதிய வைரஸ்: உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள கலெக்டர்களுக்கு முதல்வர் வலியுறுத்தல்

டெல்லி, மகாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் இத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடைய எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது.

HIGHLIGHTS

புதிய வைரஸ்: உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள கலெக்டர்களுக்கு முதல்வர் வலியுறுத்தல்
X

தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (25.4.2022), கொரோனா கட்டுப்படுத்துதல் மற்றும் தடுப்பூசி போடும் பணிகளைத் தீவிரப்படுத்துதல் தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து காணொலிக் காட்சி மூலம் நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆற்றிய உரையாவது:

கொரோனா தொடர்பான ஆலோசனைக் கூட்டமாக, ஒரு காணொலிக் காட்சியின் மூலமாக நடத்தப்படக்கூடிய கூட்டமாக இது அமைந்திருக்கிறது. இந்த அரசு பொறுப்பேற்ற போது, கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை உச்சத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அந்த இக்கட்டான நிலையிலே, தேவைப்படக்கூடிய அனைத்து தீவிர நடவடிக்கைகளையும் உடனடியாக எடுத்து, அதனை உங்களுடைய கடும் உழைப்பினால் ஓரளவுக்கு கட்டுப்படுத்தியிருக்கிறோம். அதனால் ஏற்பட இருந்த பெரும் பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் பெருமளவு நாம் குறைத்திருக்கிறோம்.

கடந்த 2021 ஜனவரி மாதம் நமது மாநிலத்தில் தடுப்பூசிகள் செலுத்தக்கூடிய பணி துவங்கியது. இதன் ஆரம்பக்கட்டத்தில் தடுப்பூசி செலுத்தக்கூடிய பணியிலிருந்த சுணக்கத்தை முழுமையாக அகற்றி, தடுப்பூசி செலுத்துவதை ஒரு மக்கள் இயக்கமாக நாம் மாற்றிக் காட்டியிருக்கிறோம். அதில் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடைய பங்கு மிக மகத்தான பங்கு என்பதை யாராலும் மறக்க முடியாது. இதனுடைய விளைவாகத்தான், தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்துவதற்கு தகுதியுள்ள 6.33 கோடி மக்களில், 74.75 சதவீதம் பேருக்கு இரண்டு தவணை தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன. 91.5 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கு, தகுதியுள்ளோரில் 41.66 சதவீதம் பேருக்கு இதுவும் செலுத்தப்பட்டுள்ளது.

அடுத்து, ஒமைக்ரான் வைரஸ் காரணமாக ஏற்பட்ட மூன்றாவது அலையின் தாக்கம் பெரும் அளவில் இல்லை. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சிறிதளவு உயர்ந்தாலும் கூட, இந்தத் தொற்று கடும் நோயையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தவில்லை. இவ்வாறு நாம் அனைவரும் இணைந்து எடுத்த பல்வேறு முயற்சிகளின் காரணமாகத்தான், பெருந்தொற்றின் தாக்கத்திலிருந்து வெளிவந்து இயல்பு வாழ்க்கைக்கு நாம் திரும்பி வருகிறோம். பொருளாதாரம் மெல்ல வளர்ச்சி பெற்று வந்து கொண்டிருக்கிறது, மக்களுடைய வாழ்வாதாரமும் படிப்படியாக உயர்ந்து கொண்டிருக்கிறது.

இந்தச் சூழ்நிலையில் தான், டெல்லி, மகாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் இத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடைய எண்ணிக்கை கடந்த ஒருவார காலமாக மீண்டும் உயரத் தொடங்கி இருக்கிறது. ஒமைக்ரான் வைரஸின் புதிய வகையால் இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது என மருத்துவ அறிஞர்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள். ஒமைக்ரான் வைரஸால் தொற்று எண்ணிக்கை உயர்ந்தபோது ஏற்பட்டது போன்றே, தற்போதும் உயிரிழப்புகள் எண்ணிக்கை உயரவில்லை என்பது சற்று ஆறுதல் அளித்துக் கொண்டிருக்கிறது.

இருந்தாலும், நாம் அனைவரும் எந்த ஒரு சூழ்நிலையையும் எதிர்கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும் என்பதே என்னுடைய வேண்டுகோள். நான் ஏற்கனவே பலமுறை அறிவுறுத்தியிருக்கிற அடிப்படையில் இந்தப் பெருந்தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்திட நம் வசம் இருக்கக்கூடிய மிகப்பெரிய ஆயுதம் தடுப்பூசியே ஆகும். தடுப்பூசி செலுத்திக் கொள்வோரில் சிலருக்கு தொற்று ஏற்பட்டாலும் கூட, உயிரிழப்பு ஏற்படுவது மிக மிகக் குறைவு. எனவே, தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுவதை உறுதி செய்வதே நமது தலையாயக் கடமையாக இருந்திட வேண்டும். நமது மாநிலத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை பெருமளவு உயர்ந்த போதிலும், இன்னும் நாட்டின் பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, நமது சாதனை சற்று குறைவாகத் தான் அமைந்திருக்கிறது. இன்னும் குறிப்பிட்டுச் சொன்னால், இரண்டாவது தவணை தடுப்பூசி போடாதவர்கள் நமது மாநிலத்தில் 1.48 கோடி பேர் இருக்கிறார்கள். பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கு தகுதி இருந்தும் அதனைப் செலுத்திக் கொள்ளாதவர்கள் இன்னும் 11.68 இலட்சம் பேர் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் இனிவரும் வாரங்களில் தடுப்பூசி செலுத்தப்படுவதை உறுதி செய்வதே நம் முன் இருக்கக்கூடிய ஒரு சவாலாக அமைந்திருக்கிறது.

அடுத்து, பெருந்தொற்றைத் தடுப்பதற்கான பல்வேறு கட்டுப்பாடுகள் அனைத்தும் பெருமளவு குறைக்கப்பட்டிருக்கக்கூடிய இந்தச் சூழ்நிலையில், பொது இடங்களிலும், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் அனைவரும் முகக்கவசம் அணிவதை நீங்கள் அனைவரும் உறுதி செய்திட வேண்டும். இவ்வாறு பொருளாதார வளர்ச்சி தடைபட்டுவிடாமலும் மக்களின் வாழ்வாதாரம் மீண்டும் பாதிக்கப்பட்டுவிடாமலும் இருப்பதை உறுதி செய்யக்கூடிய அதே நேரத்தில், எதிர்காலத்தில் இந்தப் பெருந்தொற்றினால் உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுத்திட வேண்டும். இது ஒரு Fine balance. இதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வதே நம் குறிக்கோளாக அமைந்திட வேண்டும். இதனை மனதிலே நிறுத்தி, தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அனைத்து அரசுத் துறைகளும் மாவட்ட ஆட்சியர்களும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டுமென்ற எனது வேண்டுகோளை இந்தத் தருணத்தில் மீண்டும் உங்கள் முன் வைக்கிறேன் என்று கூறினார்.

இக்கூட்டத்தில் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு, காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு, நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் அமுதா, வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஆணையர் மு.அ.சித்திக், நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர்/ சிறப்புப் பணி அலுவலர் முனைவர் ப.செந்தில்குமார், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 25 April 2022 9:51 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்
  2. காஞ்சிபுரம்
    கருணை காட்டிய கோடை மழை! மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்கள் !
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் தொழிலாளர்கள் ஆலோசனைக்
  5. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 63 கன அடி
  6. ஈரோடு
    கள்ளிப்பட்டி அருகே தோட்டத்துக்குள் புகுந்து முள்ளம்பன்றியை வேட்டையாடிய...
  7. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. செங்கம்
    உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு ஆட்சியர் நேரில் மரியாதை