/* */

மெல்ல அழிந்து வரும் இயற்கை உணவுகள்: வசந்தகாலம் மீண்டும் திரும்புமா?

ஆப்பிள் இன்று இந்திய சந்தையினை வியாபித்து நின்றாலும், சில ஆலயங்களின் பிரசாதம் என்ற அளவுக்கு வந்துவிட்டாலும் அப்பழம் உடலுக்கு நல்லதா என்றால் இல்லை..

HIGHLIGHTS

மெல்ல அழிந்து வரும் இயற்கை உணவுகள்: வசந்தகாலம் மீண்டும் திரும்புமா?
X

இயற்கை உணவு

இறைவன் சில விஷயங்களை மிக சரியாகசெய்திருக்கின்றான். குளிர் பிரதேசத்தில் சக்தி கொடுக்கும் காய்கனிகள், பாலை நிலத்தில் வெப்ப நிலத்தில் சக்தி கொடுப்பவை என அந்தந்த சூழலுக்கு ஏற்ப படைத்திருக்கின்றான்..

தமிழ்நாட்டு பனை கொடுக்கும் பதநீர் அப்படியானது, அது உடலுக்குக் குளிர்ச்சி அளிக்க வல்லது. இங்கு விளையும் அரிசி முதல் பயிறு வரை நமது உடலுக்கு ஏற்றது. அரேபிய பேரீச்சம்பழம் அந்த நாட்டு சூழலுக்கு ஏற்றது. ஒட்டகங்கள் அங்குள்ள வெப்பநிலையை தாக்குப்பிடிக்கப் படைக்கபட்டிருப்பது போல, அங்கு வாழும் மனிதர்களுக்கானது பேரீச்சம்பழம்.

ஆப்பிள் உடலுக்கு சூடு அளிக்கும் என்பதால், குளிர் பிரதேசத்தில் வாழும் மக்களுக்கான பழம் அது. மா, பலா, வாழை என நமக்கு சரியான பழத்தை இப்பூமி இங்கு விளைவித்தது. சூடான பூமியில் உடலை மேலும் சூடேற்றி உஷ்ண கோளாறை உருவாக்கும் பழமோ உணவோ இங்கு இல்லை.

இதெல்லாம் இங்கு ஆங்கிலேயர்கள் வரும் வரை எல்லாம் சரியாகத்தான் இருந்தது. வெள்ளையன் மிளகைத் தேடித்தான் வந்தான்.... வந்தவன் மிளகை வாங்கிவிட்டு சத்தில்லாததும், காரம் குறைவானதுமான மிளகாய் வற்றலை விட்டுவிட்டுச் சென்றான். அது தென் அமெரிக்காவில் இருந்து வந்தது. தக்காளியும் உருளையும் அப்படித்தான் வந்தது. புகையிலையும் அப்படி வந்ததே. இங்கு காரத்துக்கு நல்ல மிளகு பயன்படுத்தும் முறையே இருந்தது.

உண்டபின் வெற்றிலையோடு மிளகும். பாக்கும். சுண்ணாம்பும் ஏலமும் வைத்தே தாம்பூலம் தரிக்கும் பழக்கம் இருந்தது. வெள்ளையன் சமையலுக்கு வற்றலைக் கொடுத்தான். வெற்றிலைக்குப் பாக்கைக் கொடுத்தான், மிளகை அவன் கொண்டு சென்றான்.

கருப்பட்டியும் வெல்லமும் இங்கு இனிப்புக்கான பொருளாய் இருந்தன, அதில் சீனியினைத் திணித்தான், கருப்பட்டி சந்தை மெல்ல சுருங்கியது.

கள் இருந்த இடத்தை தன் நாட்டு ஒயினாலும் இன்னும் எதெல்லாமோ கொண்டு நிரப்பினான். தேங்காய் இருந்த இடத்தை எதுவெல்லாமோ பிடித்தது, தேங்காய் கொடுக்கும் ஆரோக்கியம் கொஞ்ச நஞ்சமல்ல...

மிளகு, அரிசி, கருப்பட்டி, என்றிருந்த தமிழர் உணவில் புகையிலை, சீனி, மிளகாய் என எதையெல்லாமோ திணித்தான். நோய்கள் பெருகின..

ஆப்பிளை அப்படித்தான் இங்கு பயிரிட்டான். ஆப்பிளை மட்டுமா? கேரட், பீட்ரூட் இன்னும் குளிரில் விளையும் பல பயிர்களைக் கொணர்ந்தான், அது அவனுக்குச் சரி....ஏற்கெனவே உஷ்ணத்தில் வாழும் மக்களுக்கு இவை ஏன்? அவை கூடுதல் உஷ்ணத்தை ஏற்றின..

அத்தோடு விட்டானா? உலகப்போர்கள் அரிசித் தட்டுப்பாட்டை உருவாக்கின. விளைவு..? தமிழருக்குச் சப்பாத்தியும் பரோட்டாவும் அறிமுகமானது. சப்பாத்தியை கொடுத்தானே அன்றி அதை உண்ணும் முறை பற்றி சொல்லவில்லை. சப்பாத்தி என்பது நெய் சேர்க்காமல் உண்ணகூடாத உணவு. ஆம். அதில் உஷ்ணம் அதிகம், அரேபியர் அதை தயிரோடு உண்பர், வட இந்தியர் நெய்யோடு உண்பர், தமிழன் அதை உண்ணத் தெரியாமல் உண்டான், நோய் பெருகிற்று....

அதாவது சூடான பூமியில் சூடு கொடுக்கும் உணவினை உண்டு நம்மை நாமே கெடுத்துக் கொண்டோம். வெள்ளையனின் குளிர்நாட்டில் அரிசி கஞ்சியும், பனங்கள்ளும் குடிக்கச் சொல்லுங்கள், அவன் குடிப்பானா? குடித்தால் என்னாகும் என அவனுக்குத் தெரியும், அவன் தன் சமூகத்தைக் காத்து கொண்டிருக்கிறான். உஷ்ணத்தால் ஏற்படும் நோய்க்கு விஞ்ஞானம் காரணம் சொல்லாது ..

இங்கு உஷ்ணத்தை கட்டுபடுத்த நல்லெண்ணெய் குளியலும் நெய்யும் இன்னும் பலவும் இருந்தது..எல்லாம் பழமைத்தனம் என ஒழிக்கபட்டது. இன்று எண்ணெயும் கலப்படம். இப்போதுள்ள தலைமுறை டால்டாவினை நெய் என்றும் கலப்பட எண்ணெயினை சுத்தமான எண்ணெய் எனவும் நம்புகின்றன . காரணம், அவர்களுக்கு உண்மையான பொருளும் மணமும் எப்படி இருக்கும் என்றே தெரியவில்லை....

அவை என்ன செய்யும்? எண்ணெயில் கலப்படம், உணவு பொருளில் கலப்படம் , இவை எல்லாம் இன்று ருசி இல்லா உணவல்ல... மொத்தத்தில் வெள்ளையன் நமக்கு ஆரோக்கியமில்லா உணவினைக் கொடுத்து விட்டான்!

நெய்யும் பாலும் வெண்ணெயும் போலி என அரசே சொல்லும் நிலையென்றால் தனியார் நிலையங்கள் எப்படி இருக்கும்? எதையோ தின்று, எதையோ குடித்து, எதையோ புகைத்து, எதையோ மென்று இல்லா நோய்கள் எல்லாவற்றையும் தனக்குள்ளே இழுத்து விட்டான் தமிழன்

எதை உண்டாலும் கசப்பாய் முடிப்பது உலகளாவிய உணவு முறையாய் இருந்தது, சீனாவில் தே எனும் கசப்பு பானத்தை அருந்துவார்கள்.. ஆப்ரிக்காவிலும் அரேபியாவிலும் காப்பி இருந்தது..தமிழனுக்கு வேப்பம்பூ துவையலும் பாகற்காயும் அன்றாடம் சமையலில் இருந்தது. பாகம் என்றால் சமையல், அதில் இருக்க வேண்டிய காய் பாகற்காய் ஆனது.

புரிகிறதா...?

இவை முறையாக இருந்தவரை சர்க்கரை நோய் இல்லை.. பாலில் காப்பி, டீ , சீனி என வெள்ளையன் ஏற்படுத்திய வியாபார தந்திரம், இன்று நம் வாழ்வியல் அங்கமாக மாறிவிட்டது. காபியும் டீயும் பருகியே தீரவேண்டியவை அல்ல..அவை இன்றியும் வாழமுடியும்.

அதுபோக பேக்கரிகள் வந்து நிரம்பியிருக்கின்றன. பரோட்டாவும் பேக்கரியும் இன்னும் பலவும் இங்கு ஏற்ற விஷயம் அல்ல. விஷம் அவை. இவை பெருகப் பெருக மருத்துவ மனைகளும் பெருகுகின்றன. இச்சமூகம் எவ்வளவு நல்ல விஷயங்களை நாகரீகம் என இழந்து இன்று சீழ்பிடித்த சமூகமாக மாறிவிட்டது என நினைக்கும் பொழுது தலை சுற்றுகின்றது. ஏகப்பட்ட விஷயங்களை இழந்து விட்டோம்

ஆனால் எதை எல்லாம் இழந்தோம் என்பதை கோவில்களிலும், நாட்டின் பாரம்பரியமான பண்டிகை மற்றும் சடங்குகளிலும் காணலாம்..தெய்வங்களுக்குப் பாரம்பரியமாக படைக்கப்படும் பழம், பானம் எல்லாம் உடலுக்கு நல்லவையே..

துளசி போல் அருமருந்தில்லை. அங்கு பயன்படும் எலுமிச்சை முதல் எள் வரை எல்லாமே நன்மை பயப்பவை. தாம்பூலத் தட்டில் காணப்படும் வெற்றிலை முதல் எல்லாம் ஆரோக்கியமே. தேர்களில் தெய்வங்களுக்கு வீசப்படும் மிளகும் உப்பும் உடலுக்கு எக்காலமும் நன்மையே.

உங்களுக்கு ஆரோக்கியமான உணவு வேண்டுமென்றால் நம் மரபு வழி உணவினைப் பாருங்கள், நைவேத்தியம் எனப்படும் உணவு முறையாகத் தயாரிக்கப்படுமானால் அதை விட ஆரோக்கிய உணவு வேறு இல்லை. அசைவத்தில் கூட கிராம ஆலயங்களில், ஆடும் சேவலும் எப்படி இருந்தால் அங்கு பலியிட வேண்டும் எப்படி சமைக்கபட வேண்டும் என்ற விதிகள் உண்டு.

அதன்படி உண்டால் அவையும் ஆரோக்கியமே, பிராய்லர் கோழியினை அங்கு வெட்டுவதில்லை. சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் தேய்த்தால் உஷ்ணம் வராது..

அதிகாலை சேவலோடு எழுவதும் அந்தியில் பறவைகள் ஓயும்பொழுது தூக்கத்தை தழுவதும் நோய்க்கு இடம் தராது. மலைமேல் ஏறி தெய்வத்தை வணங்குவதும் , குளிர் ஆறுகளில் குளிப்பதும் ஆரோக்கியமே, மாதம் இருமுறையாவது இருக்கும் விரதம் உடலை வலுப்படுத்தும்..

இது போன்று இன்னும் ஏராளமான விஷயங்கள் உண்டு. அவை எல்லாம் இழந்ததன் விளைவு நீரிழிவு முதல் ஏகபட்ட நோய் ஒருபுறம்.. மிக மிக மோசமான சிக்கலை நோக்கி செல்கின்றது இச்சமூகம்..பழமையினை மீட்டெடுத்து நல்வாழ்வு வாழ இந்துமதம் உதவும், நம் முன்னோரின் நலமான பலமான வாழ்வின் ரகசியம் அங்குதான் புதைந்திருக்கின்றது..அதை மீட்டெடுப்பீர்களாயின் நல்வாழ்வு கிட்டும்... மாறாக அதெல்லாம் பழமை என ஒதுக்குவீராயின் மருத்துவரும் மருந்துகடைக்காரனுமே உங்களுக்கு தெய்வமாவான்..

அப்படி ஒரு பலவீனமான சமூகமாக நம் நாடு உருவாக வேண்டும் என வெள்ளையன் ஆசைபட்டதன் விளைவுதான் இது. இந்தியாவை தன் மருந்து மற்றும் மருத்துவத்தின் வேட்டைக்காடாக்க வேண்டும் என்பது அக்காலத்தில் இருந்தே அவன் கணக்கு..அது மிளகைத் திருடி வற்றலைக் கொட்டுவதில் தொடங்கி இன்றைய K F C வரை தொடர்கின்றது...

நாம் பாரம்பரியத்தை மீட்டெடுத்தால் தவிர நம் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க முடியாது. இதற்கான விழிப்புணர்வு மெல்ல உருவாகி வருகிறது. இயற்கை உணவு முறைகள், இயற்கை சிகிச்சை முறைகள் குறித்து பலரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி, பயிற்சிகள், சிகிச்சைகள் வழங்கி வருகின்றனர். யோகா, இயற்கை வாழ்வியல் முறைகள் குறித்து பலரும் நமக்கு பயிற்சிகளை வழங்கி வருகின்றனர். அவர்களுடன் நாமும் இணைந்து நம் உடல் நலத்தையும், மனநலத்தையும், உலகின் சுகாதாரத்தையும் பேணிப்பாதுகாப்போம்.

Updated On: 24 Oct 2022 6:44 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  2. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  3. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  4. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  6. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  7. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  8. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  9. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  10. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!