தமிழகத்தில் 6.9 நாட்களுக்கு மின் உற்பத்தி செய்ய நிலக்கரி கையிருப்பு: மின்துறை அமைச்சர் பேட்டி
தமிழகத்தில், 6.9 நாட்களுக்கு மின் உற்பத்தி செய்ய நிலக்கரி கையிருப்பு உள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
HIGHLIGHTS
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே வாயலூரில் நடைபெற்று வரும் எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல அனல்மின் திட்ட கட்டுமான பணிகளை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் ஆய்வு செய்தார். அனல் மின்நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமான பணிகள் குறித்து அப்போது அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இதைத்க்தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு அமைச்சர் அளித்த பேட்டி: தலா 660 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2அலகுகள் அமைக்கப்பட்டு வருகிறது. 1320 மெகாவாட் மின் உற்பத்தி கொண்ட இந்த திட்டம் 2010 ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. 2018 மார்ச்சில் தொடங்கப்பட்டிருக்க வேண்டியது.
ஆனால், 4ஆண்டுகள் கடந்தும் கால தாமதமாகவும் நடைபெற்று வருவதால் ஒப்பந்த நிறுவனத்திடம் கூடுதல் பணியாட்களை கொண்டு பணிகளை விரைவுபடுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 7800 கோடி மதிப்பிலான அனல் மின் நிலைய பணிகள் தற்போது வரையில் 53சதவீதம்மட்டுமே முடிவடைந்துள்ளது. எஞ்சிய பணிகள் விரைவுபடுத்தப்படும்.
2024 மார்ச்சில் 1அலகில் 660 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது. 2024 ஜூனில் மற்றொரு அலகில் 660 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி தொடங்கப்படும். அடுத்த 5ஆண்டுகளில் தமிழகத்தில் 6220 மெகாவாட் சொந்த நிறுவுதலில் மின் உற்பத்தி தொடங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் தி.மு.க ஆட்சியில் ஓராண்டில் தொழில்துறை வளர்ச்சியடைந்து வருவதாகவும், புதிய தொழிற்சாலைகளின் தேவைக்கேற்ப மின்சாரம் வழங்கும் வகையில் மின் உற்பத்தி அதிகரிக்கும் நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார். நிலக்கரி மாயமான விவகாரம் தொடர்பாக சிறப்பு குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், அறிக்கை கிடைத்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
நிலக்கரி கையிருப்பு தொடர்பாக தினந்தோறும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், தமிழ்நாட்டில் 6.9 நாட்கள் மின் உற்பத்திக்கான நிலக்கரி தற்போது கையிருப்பில் உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். 143டாலர் என்ற குறைந்த விலையில் தமிழ்நாடு மின்சார வாரியம் நிலக்கரியை இறக்குமதி செய்ததாகவும், பிற மாநிலங்கள் 187 டாலர் வரையில் விலை கொடுத்து நிலக்கரி இறக்குமதி செய்துள்ளதாக குறிப்பிட்டார். தமிழ்நாடு தான் இந்தியாவிலேயே குறைந்த விலையில் நிலக்கரி இறக்குமதி செய்ததாக அமைச்சர் கூறினார்.
நிலக்கரி பற்றாக்குறை காலங்களில் மட்டுமே ஆயில் கொண்டு மின் உற்பத்தி நடைபெறும் எனவும், தற்போது தமிழ்நாட்டில் 6.9 நாட்கள் மின் உற்பத்திக்கான நிலக்கரி தற்போது கையிருப்பில் உள்ளதால் முழுவதும் நிலக்கரி கொண்டு மின் உற்பத்தி செய்யப்படுவதாக தெரிவித்தார். சாம்பல் கழிவுகளை கொண்டு செல்லும் ராட்சத குழாய்களில் உடைப்பு ஏற்படும் போது உடனுக்குடன் சரிசெய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
5 ஆண்டுகளில் 6220 மெகாவாட் மின் உற்பத்தி புதியதாக தொடங்கும் வகையில் நடவடிக்கைகள் எடுத்து வருவதாக தெரிவித்தார். மின்வெட்டு தொடர்பாக பொத்தாம் பொதுவாக குற்றச்சாட்டு வைக்காமல் சர்வீஸ் எண் கொடுத்து புகார் கூறினால் 15நிமிடங்களில் அங்கு எவ்வளவு நேரம் மின்வெட்டு இருந்தது என்பதை ஆதாரப்பூர்வமாக தெரிவிப்பதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார். ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் தொடர்பான கேள்விக்கு மின் உற்பத்தி குறித்து மட்டுமே கேள்வி கேளுங்கள் எனக் கூறி மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளிக்க மறுத்து விட்டார். இதனால் செய்தியாளர்கள் இடையே பரபரப்பு நிலவியது.