இரத்த தானம் செய்வதில் உள்ள சிரமங்களை நீக்க தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் மனு
தென்காசி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர், மருத்துவர் சமீரன் IAS அவர்களை சந்தித்து இரத்ததானம் மற்றும் இரத்ததான முகாம்கள் நடத்துவதில் உள்ள சிரமங்களை நீக்க வேண்டும் என்று சம்பந்தபட்ட துறைக்கு கோரிக்கை மனு அளித்தனர்.
HIGHLIGHTS
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இரத்ததானம் மற்றும் இரத்ததான முகாம்கள் நடத்துவதில் உள்ள சிரமங்களை நீக்க வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர், மருத்துவர் சமீரன் I A S அவர்களை சந்தித்து மனு கொடுத்தனர். சம்பந்தபட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். அந்த கோரிக்கை மனுவில் குறிப்பிட்டதாவது,
கடந்த காலங்களில் நமது தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் அவசர இரத்ததான சேவைக்காக வரும் தன்னார்வ குருதி கொடையாளர்களின் இரத்த மாதிரிகள்(Blood Sample )களின் பரிசோதனைகள் இரத்தவங்கியிலேயே நடத்தப்பட்டது. தற்போது பரிசோதனைக்கென தனிக்கட்டிடத்தில் செயல்படும் பரிசோதனை நிலையத்திற்கு சென்று பரிசோதிக்க வலியுறுத்தப்படுகிறது. உள்நோயாளிகள்,புறநோயாளிகள் என அதிக எண்ணிக்கையில் இரத்தப்பரிசோதனைக்காக பரிசோதனை நிலையத்தில் வரிசையில் காத்திருக்கும்போது, வேலை செய்யும் இடங்களில் சில மணிநேர அனுமதி பெற்று இரத்ததானம் செய்ய வரும் கொடையாளர்கள் மிகவும் அவதி படுகின்றனர்.
மருத்துவமனையில் உள்ள உள்-புற நோயாளிகளுடன் சேர்ந்து பரிசோதனைக்காக பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. இதுபோன்ற அணுகுமுறைகளால் தன்னார்வமாக வரும் இரத்த கொடையாளர்கள் தொடர்ந்து வர மறுக்கும் நிலை ஏற்படுகிறது. அத்தோடு சேவை நோக்கில் கொடையாளர்களை இல்லம் தேடிச்சென்று அழைத்து வரும் எங்களைப் போன்ற அமைப்பினருக்கும் மிகுந்த மன வேதனை ஏற்படுகிறது.
இரத்ததான முகாம் நடத்துவதற்காகவும், அவசர இரத்த தேவைக்காகவும் தென்காசி அரசு இரத்த வங்கியில் பணிபுரியும் ஊழியர்களை சரிவர தொடர்பு கொள்ள முடியவில்லை. பணியிலிருக்கும் ஊழியர்களின் சொந்த தொலைபேசி எண்கள் மட்டுமே எங்களைப்போன்ற தன்னார்வ அமைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த பணியாளர்கள் வேறு இடத்திற்கு பணி மாறி சென்றால் அவசர காலத்தில் தொடர்புகொள்ள நிரந்தரமான தனி தொலைபேசி அல்லது அலைபேசி எண் ஏற்படுத்தப்பட்டால் தான் எங்கள் சேவையை மேலும் சிறப்பாக செய்ய வசதியாக இருக்கும்.
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இரத்த வங்கியில் ஒவ்வொரு இரத்த பிரிவுகளில் இருப்புகள் எவ்வளவு என்பதை முன்பு போல் அறிய முடியவில்லை. எனவே முன்பிருந்ததைப்போல இரத்த இருப்பை தினசரி அறிவிப்பாக வெளியிட வேண்டுகிறோம்.
இரத்தவங்கியின் இரத்தம் பெறும் நேரத்தை நண்பகல் ஒரு மணி வரை என்பதை கூடுதலாக ஒரு மணி நேரம் நீட்டித்தால் அணுகுவதற்கு வசதியாக இருக்கும்.
பிற மாவட்டங்களைப் போலவே நமது தென்காசி மாவட்டத்திற்கும் நடமாடும் இரத்த சேமிப்பு வாகனம் ( Mobile blood collection vehicles) ஏற்பாடு செய்தால் மாவட்டத்தின் எல்லா பகுதிகளிலும் இரத்ததான முகாம் நடத்துவதற்கு எளிதாக இருக்கும்.
இரத்தம் தேவைப்படும் உள்நோயாளிகளின் உறவினர்களுக்கு கடுமையான நெருக்கடி கொடுக்கப்படுகிறது இதனால் அவர்கள் மிகுந்த மனவேதனைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இது குறித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுகிறோம்.
தென்காசி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் 2019 - 20 காலத்தில் அவசரநிலையில் ( Emergency ) 56 யூனிட் இரத்தமும், ஐந்து ஊர்களில் இரத்ததான முகாம்களும் நடத்தியுள்ளோம். கடந்த காலங்களில் இரத்ததான முகாம்கள் நடத்தும் எங்களை போன்ற தன்னார்வ அமைப்புகளை ஊக்கப்படுத்தும் விதமாக மாவட்ட ஆட்சி தலைவர் மற்றும் சுகாதாரத்துறை மூலம் வழங்கப்பட்டு வந்த பாராட்டு சான்றிதழ்கள் தொடர்ச்சியாக வழங்கப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு பல்வேறு கோரிக்கைகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தென்காசி மாவட்ட நிர்வாகிகள் வழங்கிய மனுவில் குறிப்பிட்ட பட்டிருந்தது. மாவட்ட ஆட்சியரும் ஆவண செய்வதாக தெரிவித்துள்ளார் .