ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் வெடி வைத்து தகர்ப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றம் ஒன்று மர்ம நபர்களால் வெடிவைத்து தகர்க்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் அருகே உள்ள புள்ளான்விடுதி கிராமத்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்ற கோயில் ஒன்று உள்ளது. இந்த கோயிலில் வாரந்தோறும் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் வழிபாடு நடத்துவதும் தினந்தோறும் பூஜைகள் மேற்கொண்டு வருவதும் வழக்கமாயிருந்தது. இந்நிலையில் அக்கோயிலில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் இன்று மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு புறப்பட்டு செல்ல இருந்தனர்.
இதனிடையே நேற்று இரவு அந்த கோயில் பூட்டி இருந்த நிலையில் மர்ம நபர்கள் சிலர் வெடிகளை வைத்து கோயிலை தகர்த்துள்ளனர். சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடி வந்து பார்ப்பதற்குள் மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுகுறித்து வடகாடு போலீசாருக்கு ,பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.இதன் அடிப்படையில் அங்கு வந்த போலீசார் இச்சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எதற்காக அந்த கோயிலை வெடி வைத்து மர்ம நபர்கள் தகர்த்தனர் என்பது குறித்தும் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறித்தும் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.