மயிலாடுதுறை அருகே பைக்கில் 10 கிலோ கஞ்சா கடத்திச் சென்ற வாலிபர் கைது
மயிலாடுதுறை அருகே பைக்கில் 10 கிலோ கஞ்சா கடத்திச் சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியில் அதிகளவில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங்குக்கு ரகசிய தகவல் சென்றுள்ளது. இதையடுத்து, அவரது உத்தரவின்பேரில் காவல் உதவி ஆய்வாளர் இளையராஜா தலைமையிலான தனிப்படை போலீசார் குத்தாலம் அருகே ஆலங்குடி கிராமத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியே இருச்கர வாகனத்தில் வேகமாக வந்த முருகமங்கலம் கிராமத்தை சேர்ந்த குருசாமி மகன் மணிகண்டன் (36) என்பவரை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அப்போது மணிகண்டன் வந்த இருசக்கர வாகனத்தில் 2 கிலோ எடையுள்ள 5 பொட்டலங்கள் இருப்பதை கண்ட போலீசார் அதனை சோதனை செய்தபோது அதில் 10 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, தனிப்படை போலீசார் மணிகண்டனை குத்தாலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் தொடர்ந்து, நிலைய ஆய்வாளர் வள்ளி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ.3.5 லட்சம் மதிப்பிலான 10 கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்ததுடன் மணிகண்டனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.