மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்
மக்களவை தேர்தலில் வாக்களிக்கச் செல்வோர் வசதிக்காக இன்று இரவு தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
HIGHLIGHTS
மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (19ம் தேதி) தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடக்கிறது. இந்த தேர்தலில் 100 சதவீத வாக்குகள் பதிவாக வேண்டும் என்பதற்காக மாவட்ட தேர்தல் அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில், மக்களவை தேர்தலில் வாக்களிப்பதற்காக சென்னையில் வசிக்கும் தென் மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல துவங்கி உள்ளனர்.
அந்தவகையில், தாம்பரம் ரயில் நிலையம், பேருந்து நிலைய பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. குமரிக்கு புறப்பட்ட சிறப்பு ரயிலில் பயணிகள் முண்டியடித்துக் கொண்டு ஏறினர். பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலின் முன் பதிவுப் பெட்டியில் மக்கள் கூட்டம் அலை மோதியது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
வாக்களிக்க செல்வோர் வசதிக்காக இன்று இரவு 9.50 மணிக்கு சென்னை தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இன்று இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு நாளை காலை 11.15க்கு திருநெல்வேலி செல்கிறது. மறுமார்கமாக நாளை இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.45 மணிக்கு தாம்பரம் வந்து சேர்கிறது.