ஏழைகள் என்றால் கிள்ளுக்கீரையா? குமரி சம்பவம் குறித்து கமல் ஆவேசம்
குமரியில், பேருந்தில் இருந்து நரிக்குறவ இன மக்கள் இறக்கிவிடப்பட்ட சம்பவத்திற்கு, கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
HIGHLIGHTS
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பேருந்து நிலையத்தில், அரசு பேருந்தில் ஏறிய நரிக்குறவ இனத்தவர்கள், குழந்தையுடன் இறக்கிவிடப்பட்டனர். பேருந்தில் ஏற அனுமதிக்கப்படவில்லை. இதேபோல், இரு தினங்களுக்கு முன்பு குமரி மாவட்டத்தில் மீனவ பெண்மணி, பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்டார்.இவ்விரு சம்பவங்கள் தொடர்பான காட்சிகள், சமூக வலைதளங்களில் வெளியாகி, அதிகம் பகிரப்பட்டன. சம்மந்தப்பட்ட பேருந்துகளில் நடத்துனர், ஓட்டுனர்கள் மீது நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நரிக்குற இன குடும்பத்தினர், அரசு பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட சம்பவத்திற்கு, மக்கள் நீதிமய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், அரசுப் பேருந்தில் இிருந்து மீன் விற்கும் மூதாட்டி வலுக்கட்டாயமாக இறக்கிவிடப்பட்ட சம்பவத்தால் தமிழகமே கொதித்துக் கிடக்கிறது. நேற்று குறவர் இனத்தைச் சேர்ந்த ஒரு ஏழைக் குடும்பம் பேருந்தில் இருந்து வலுக்கட்டாயமாக இறக்கி விடப்பட்டு, உடைமைகளும் சாலையில் வீசப்பட்டுள்ளன.
ஏழைகள் என்றால் கிள்ளுக்கீரையா? கேட்க நாதியில்லை எனும் எண்ணமா? மக்களிடம் மரியாதை காட்டாத ஊழியர்கள், தங்கள் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். இதுபோன்ற அவமதிப்புகள் இனியும் நிகழாமல் இருப்பதைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் உறுதி செய்ய வேண்டும் என்று, கமல்ஹாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.