வாகனங்களில் கட்சிக் கொடி, தலைவர்களின் படங்களை ஒட்ட ஐகோர்ட் கிளை தடை
தேர்தல் நேரங்களை தவிர மற்ற நேரங்களில் வாகனங்களில் கட்சிக் கொடிகள், தலைவர்களின் படங்களை ஒட்டக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
HIGHLIGHTS
மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ரமேஷ் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகள் அவரவர் விருப்பத்திற்கேற்ப மாற்றம் செய்யப்படுகிறது. அவ்வாறு இல்லாமல், அனைவரும் எளிதில் காணும் வகையில் அமைக்கப்பட வேண்டும் என்ற உத்தரவு உள்ளது. ஆனால், இதனை பெரும்பாலான வாகன ஓட்டிகள் கண்டுகொள்வது இல்லை. இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது; வாகனத்தின் நம்பர் போர்டுகள் மோட்டார் வாகன விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். வாகனங்களின் வெளிப்புறத்தில் தெரியும்படி தலைவர்களின் புகைப்படங்கள் அல்லது வேறு ஏதேனும் படங்கள் ஒட்டப்பட்டிருந்தால் அதனை 60 நாட்களில் அகற்ற வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், வாகனங்களில் அரசியல் கட்சி கொடிகள் மற்றும் கட்சி தலைவர்களின் புகைப்படங்களை, அரசியல் கட்சியினர் தேர்தல் நேரங்களில் பயன்படுத்தலாமே தவிர மற்ற நேரங்களில் பயன்படுத்துவது ஏற்கத்தக்கது அல்ல எனறும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.