காற்றழுத்தத்தாழ்வு மண்டலம்: டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலம் காரணமாக டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
HIGHLIGHTS
வங்கக்கடலில் வலுவடைந்துள்ள ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலம் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வட தமிழக கடலோர பகுதியிலிருந்து 270 கி.மீ தொலைவில் நிலைகொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் எதிரொலியாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்கள், புதுச்சேரி காரைக்காலில் இன்று கனமழை பெய்யக்கூடும் எனவும் தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, திருச்சி ஆகிய 8 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்காலில் நாளை மிக கனமழை பெய்யும் எனவும் அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடல் மன்னார் வளைகுடா அதையொட்டிய வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடல் பகுதிகளில் மணிக்கு 75 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் நாளை வரை மீனவர்கள் அந்த பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.