சசிகலாவுடன் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் திடீர் சந்திப்பு
தஞ்சாவூர் அருகே இன்று சசிகலாவை முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் திடீர் என சந்தித்து பேசினார்.
HIGHLIGHTS
அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து கட்சி இரண்டு பட்டு உள்ளது. பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவோடு எடப்பாடி பழனிசாமி தன்னை இடைக்கால பொது செயலாளர் என கூறி வருகிறார். இதை உறுதிப்படுத்துவதற்காக கடந்த ஜூலை 11ஆம் தேதி அவர் பொதுக்குழு கூட்டம் நடத்தினார்.அந்த கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளர் மற்றும் மாநில அளவில் முக்கிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரி ஓ. பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜெயச்சந்திரன் எடப்பாடி பழனிசாமி நடத்திய கூட்டம் செல்லாது என தீர்ப்பு அளித்தார்.
இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இரண்டு நீதியரசர்கள் அடங்கிய அமர்வு இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரணை நடத்தி தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதித்ததோடு அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும். எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தொடரலாம் என தீர்ப்பளித்தார். இதனை எதிர்த்து தற்போது ஓ. பன்னீர்செல்வம் டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.
இது ஒரு புறம் இருக்க, பன்னீர் செல்வம் தனக்கு ஆதரவாக கோர்ட்டு தீர்ப்பு வந்த போது எடப்பாடி பழனிசாமி, சசிகலா, டி.டி.வி.தினகரன் எல்லோரும் ஒன்று சேர வேண்டும் என ஒரு கோரிக்கை வைத்தார். அந்த கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி உடனடியாக நிராகரித்தார். டி.டி.வி தினகரன் ஓ.பன்னீர்செல்வம் கருத்துக்கு வரவேற்பு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் வி. கே. சசிகலா புரட்சி பயணம் என்ற பெயரில் தஞ்சாவூர் பகுதியில் சுற்றுப்பயணம் செய்து வந்தார். நேற்று மன்னார்குடியில் நடைபெற்ற ஒரு கோவில் விழாவில் பங்கேற்று விட்டு சசிகலா ஒரத்தநாடு வழியாக இன்று தஞ்சாவூருக்கு காரில் திரும்பினார். அப்போது முன்னாள் அமைச்சரும் ஓ. பன்னீர் செல்வத்தின் தீவிர ஆதரவாளருமான வைத்திலிங்கம் காரில் வந்தார். இருவரும் ஒரே சாலையில் வந்ததால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது .சசிகலா ஏராளமான கார்களுடன் வந்ததை அறிந்த வைத்திலிங்கம் தனது காரில் இருந்து இறங்கி சசிகலா அருகில் சென்றார். உடனே சசிகலாவும் தனது காரில் இருந்து இறங்கினார். இருவரும் பரஸ்பர வணக்கம் தெரிவித்து நலம் விசாரித்துக் கொண்டனர். அப்போது வைத்திலிங்கத்துடன் வந்த கட்சி பிரமுகர் ஒருவர் அண்ணனுக்கு இன்று பிறந்தநாள் என்று கூற உடனடியாக சசிகலா தனது காரில் இருந்து சாக்லேட்டுகளை அவருக்கு எடுத்துக் கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
அத்துடன் இது தற்காலிகமாக வழங்கப்படும் இனிப்பு அல்ல. விரைவில் நிரந்தரமாக இனிப்பு வழங்கக்கூடிய சூழல் உருவாகும் என கூறி வாழ்த்தியிருக்கிறார். ஓ. பன்னீர் செல்வத்தின் கருத்தை நிரூபிக்கும் வகையில் சசிகலாவை வைத்திலிங்கம் திடீரென சந்தித்து பேசி இருப்பது அரசியல் வட்டாரத்தில் குறிப்பாக அ.தி.மு.க. வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.