செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் பிரதமர் படத்தை ஒட்டும் பாஜகவினர்
செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் பிரதமரின் புகைப்படம் இடம்பெறவில்லை என பாஜக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.
HIGHLIGHTS
44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் தொடங்குகிறது. பிரதமர் நரேந்திர மோடி நிகழ்ச்சியை தொடங்கி வைக்கும் நிலையில் வருகிற 10ஆம் தேதி முதல் வரை செஸ் போட்டி நடைபெறுகிறது. சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நாளை மாலை 6 மணிக்கு செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ள நிலையில் சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதனிடையே செஸ் ஒலிம்பியாட் போட்டியின் விளம்பர நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடியின் படம் எங்கும் இடம் பெறவில்லை என பாஜகவினர் குற்றம் சாட்டினர். இது குறித்து கருத்து தெரிவித்த புதுச்சேரி மற்றும் தெலுங்கானா ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் , செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி நடக்கும் இடங்களில் நாட்டின் அடையாளமான பிரதமர் மோடியின் படம் இல்லை என்றும், இதை முதல்வர் மு .க .ஸ்டாலின் கவனித்து எல்லா இடங்களிலும் அவரது படத்தை இடம் பெறச் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆனால் பிரதமர் மோடியின் படம் எங்கும் புறக்கணிக்கப்படவில்லை என்றும் போட்டியை தொடங்கி வைப்பதே பிரதமர் தான் எனவும் அமைச்சர் மெய்யநாதன் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் அத்துடன் பிரதமர் மோடியின் புகைப்படத்தை ஒட்டும் பணியில் பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் மாநில தலைவர் அமர் பிரசாத்ரெட்டி தீவிரம் காட்டி வருகிறார். அதன்படி செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் பிரதமர் மோடியின் ஸ்டிக்கரை பாஜகவினர் ஒட்டி வருகின்றனர்.