/* */

நடிகை கௌதமியிடம் ரூ.7.70 கோடி மோசடி

தன்னிடம் ரூ.7.70 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளதாக நடிகை கௌதமி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் செய்துள்ளார்.

HIGHLIGHTS

நடிகை கௌதமியிடம் ரூ.7.70 கோடி மோசடி
X

நடிகை கௌதமி 

சென்னையை அடுத்த கோட்டையூரில் 8.61 ஏக்கர் நிலம் விற்பனை செய்ததில் 7.70 கோடி ரூபாய் மோசடி செய்த தொழிலதிபர் மீது நடவடிக்கை எடுக்ககோரி நடிகை கௌதமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆபீசில் புகார் கொடுத்துள்ளார்.

சென்னை அக்கரைப் பகுதியில் வசித்து வருபவர் நடிகை கௌதமி. இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுடன் 125 க்கும் மேற்பட்ட படங்களில் நாயகியாக நடித்துள்ளார். இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில் நான் நடித்து சம்பாதித்த பணத்தில் கடந்த 1990ம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டம் கோட்டையூர் கிராமத்தில் 10 ஏக்கர் நிலத்தை தனது பெயரிலும் தனது தாயார் பெயரிலும் வாங்கினேன். 2004ம் ஆண்டு தான் புற்றுநோய் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தேன். எனது குழந்தைக்கு நான்கு வயது இருக்கும் நிலையில் இடத்தை நிர்வாகிக்க முடியவில்லை. அப்போது தனக்கு நன்கு அறிமுகமான அழகப்பன் என்பவர் மூலம் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் பலராமன் மற்றும் செங்கல்பட்டை சேர்ந்த ரகுநாதன் ஆகியோர் அறிமுகம் கிடைத்தது.

இந்த நிலையில் 2015ம் ஆண்டு எனக்கு சொந்தமான 8.61 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்ய வேண்டி பலராமன் மற்றும் ரகுநாதனுக்கு பவர் ஆப் அட்டர்னி செய்து கொடுத்தேன். அதன் பிறகு இருவரும் சேர்ந்து அந்த நிலத்தை தனியார் நிறுவனதிற்கு 4.10 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து இந்த பணத்தை இரண்டு தவணையாக கொடுத்து தன்னிடம் கையெழுத்து பெற்றனர்.

அதன் பிறகு 2021 செப்டம்பர் 4ம் தேதி வருமானவரித்துறை அலுவலகத்தில் இருந்து தனக்கு கடிதம் ஒன்று வந்தது. அதில் கோட்டையூரில் உள்ள சொத்துக்கள் 11,17,38,907 கோடிக்கு விற்பனை செய்து தொடர்பாக வருமானவரித்துறைக்கு 2.61 கோடி ரூபாய் வரி கட்டவில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்து. பின்னர் வருமானவரித்துறையினரால் எனது வங்கிக்கணக்கு அனைத்தும் முடக்கம் செய்யப்பட்டதால் நான் மன உளைச்சலுக்கு ஆளானேன். இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து எனது சொத்து விற்பனை செய்தது தொடர்பாக ஆவணங்களை சுங்குவார்சத்திரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் நகலெடுத்து பார்த்த போது எனது பவர் ஏஜெண்டாக இருந்த பலராமன், ரகுநாதன் ஆகியோர் 6-1-2016ம் ஆண்டு 8.61 ஏக்கர் நிலத்தை 11 கோடியே 17 லட்சத்திற்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

முதற்கட்டமாக 4.10 கோடி ரூபாயை மட்டும் கொடுத்து விட்டு மீதமுள்ள 7.7 கோடி ரூபாயை பணத்தை தராமல் ஏமாற்றியது தெரியவந்தது. எனவே பலராமன், ரகுநாதன் மீது உரிய நடவடிக்கை எடுத்து எனது பணத்தை பெற்று தர வேண்டும் என புகாரில் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தப் புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கெனவே நடிகை கௌதமி தனது நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து மோசடியில் ஈடுபட்டதாக ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்ததன் பேரில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அழகப்பன் என்பவரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

Updated On: 28 Sep 2023 5:08 AM GMT

Related News