மாவட்டங்களுக்கு இடையே செல்ல இ-பதிவு முறை நீக்கப்பட வாய்ப்பு
தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று குறையத் தொடங்கிய நிலையில் ஜூன் 14 ஆம் தேதிக்கு பின்னர் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்க வாய்ப்பு
HIGHLIGHTS
தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று குறையத் தொடங்கிய நிலையில் ஜூன் 14 ஆம் தேதிக்கு பின்னர் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மாவட்டங்களுக்கு இடையே செல்ல இ-பதிவு முறை ரத்து செய்யப்படும் என தகவல் வெளிவந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா 2 ஆம் அலை பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி முதல் சில கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. ஆனாலும் கொரோனா நோய்த்தொற்று குறையாத காரணத்தினால் மே 24 ஆம் தேதி முதல் தளர்வுகள் இல்லாத முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அவை இரு முறை நீட்டிக்கப்பட்டு ஜூன் 7 ஆம் தேதி வரை அமலில் இருந்தது. இதன் காரணமாக கொரோனா பரவல் ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் வந்தது.
தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தில் இருந்து 17 ஆயிரமாக குறைந்துள்ளது. இதனால் தமிழக அரசு சில தளர்வுகளை அறிவித்து ஊரடங்கை ஜூன் 14 வரை நீட்டித்துள்ளது. அதன்படி அனைத்து அத்தியாவசிய தேவை கடைகள் மாலை 5 மணி வரை திறந்திருக்கும். இந்நிலையில் ஜூன் 14 ஆம் தேதிக்கு பின்னர் ஊரடங்கை நீடிப்பது குறித்து தமிழக முதல்வர் தலைமையிலான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் ஊரடங்கை நீடிக்கலாமா? அவ்வாறு நீடிக்கப்பட்டால் அதில் தளர்வுகள் எவ்வாறு வழங்கலாம் என்பது குறித்து பரிந்துரைகள் வழங்கப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது.
அதில், முதற்கட்டமாக தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே செல்ல இ-பதிவு முறை நீக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் பல நாட்களாக மதுபான கடைகள் திறக்கப்படாத காரணத்தினால் அரசாங்கத்திற்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால் அதனை திறக்க வாய்ப்புள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.