பண்ருட்டி அருகே தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதல்; 4 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே இரண்டு தனியார் பஸ்கள், மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.
HIGHLIGHTS
பண்ருட்டி அருகே 2 தனியார் பஸ்ககள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இந்த கோர விபத்தில், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே மேல்பட்டாம்பாக்கம் என்ற இடத்தில் எதிர்பாராத விதமாக தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தால் இரண்டு பஸ்களின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
விபத்தில் சிக்கிய பஸ், நொறுங்கிய நிலையில் காட்சியளிக்கிறது
இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே விபத்து நடந்த இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் 5 பேர் கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த விபத்து குறித்து முதற்கட்ட விசாரணையில், பண்ருட்டியில் இருந்து கடலூர் நோக்கி சென்ற தனியார் பஸ்சின் முன்பக்கத்தின் டயர் வெடித்ததால்தான் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்தவர்களுக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், இந்த விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணத்தொகை அறிவித்துள்ளார். மேலும், படுகாயமடைந்தவர்களுக்கு நிவாரணமாக ரூ. 50 ஆயிரம், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 25 ஆயிரம் என, நிவாரணத் தொகை வழங்கப்படுவதாக, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.