பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை இடிக்க உத்தரவு
தமிழகத்தில் பழுதடைந்த பள்ளிக் கட்டிடங்களை இடித்துவிடுமாறு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை, கடந்த 29ம் தேதி துவங்கியது; தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சில மாவட்டங்களில் மிதமான மழையும், சில பகுதிகளில் கனமழையும் தொடர்ந்து பெய்து வருகிறது. குறிப்பாக, தமிழகத்தின் தலைநகரம் சென்னையில், பலத்த கனமழை பெய்து வருவதால், பல குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ள பாதிப்புகளும் ஏற்பட்டது. இன்னும் சில தினங்களுக்கு மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக, வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கனமழை தொடரும் பகுதிகளில், பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்க, அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் முடிவெடுத்து அறிவிக்க, அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, சில மாவட்டங்களில் கடந்த வாரத்தில், கனமழை காரணமாக பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இன்னும் சில தினங்களுக்கு மழை தொடர இருப்பதாக, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
எனினும் தொடரும் மழைக்காலமாக இருப்பதால், பள்ளி வளாகங்களில் பாழடைந்த, பழுதடைந்த மற்றும் பயன்பாடற்ற பள்ளி வகுப்பறை கட்டிடங்களை இடித்து அகற்றுமாறு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும், பள்ளிகளில், ஸ்விட்ச் போர்டு உள்ளிட்ட மின்சாதன பொருட்களின் பாதுகாப்பு தன்மையை உறுதிபடுத்திக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தகவலை, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம், கல்லணையில் இருந்து தமிழக அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில், இரண்டு போக்குவரத்து வழித்தடங்களை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார். அந்த வழித்தடத்தில் சென்ற பஸ்சில் சிறிது தூரம் அமைச்சர் அன்பில் மகேஷ் அமர்ந்து பயணித்தார். அப்போது அவர், தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி வரலாற்றிலேயே முதல்முறையாக திருச்சியையும், தஞ்சையையும் கல்லணை வழியாக இரண்டு மாவட்டத்தையும் இணைத்த பெருமை முதல்வரையே சாரும். இந்த வழித்தடத்தில் தினந்தோறும் வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுக்கு இது பயனுள்ள வழித்தடமாக இருக்கும்.
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மழைநீர் வடிவதாக இருந்தாலும், ஊறிப்போன சுற்றுச்சுவராக இருந்தாலும், அதையெல்லாம் இடித்துவிடுமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பற்ற சூழல் இருக்கிற இடத்தில், பள்ளி மாணவர்களை அனுமதிக்க கூடாது எனவும், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், ஒவ்வொரு வகுப்பறைகளிலும் உள்ள ஸ்விட்ச் போர்டு, மின்விளக்குகள், மின்விசிறிகள், மின்சாதன பொருட்கள் என, அனைத்தையும் ஜாக்கிரதையாக கண்காணிக்க வேண்டும் எனவும், அதேபோல் பள்ளிக் கட்டிடங்கள் எங்கெல்லாம் பழுதடைந்து உள்ளதோ, அவற்றை எல்லாம் இடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேபோல், தண்ணீர் எந்த பள்ளிகளிலும் தேங்கக்கூடாது எனவும், கிராமப்புறங்களாக இருந்தால் வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் மோட்டார் பம்புகளைக் கொண்டு இறைக்க வேண்டும் என்ற அறிவுறுத்தல்களும் கல்வி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.