/* */

"மக்களுடன் முதல்வர்” புதிய திட்டம்: முதல்வர் இன்று துவக்கி வைப்பு

"மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

மக்களுடன் முதல்வர்”  புதிய திட்டம்: முதல்வர் இன்று துவக்கி வைப்பு
X

மக்களுடன் முதல்வர் திட்டத்தை துவக்கி வைத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

அரசின் சேவைகள் பொதுமக்களை விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர்ந்திட "மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

கோயம்புத்தூர் மாவட்டம், ஆவாரம்பாளையத்தில், அரசுத் துறைகளை அன்றாடம் அணுகும் பொதுமக்களுக்கு, அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் அவர்களைச் சென்றுசேரும் வகையிலும், நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்திடவும், திராவிட மாடல் ஆட்சியின் மற்றுமொரு மைல்கல்லாக "மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கும் விதமாக மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, மனுக்களை பதிவு செய்யும் சிறப்பு முகாமினை பார்வையிட்டு, பதிவு செய்ய வந்த மக்களிடம் கோரிக்கைகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.

அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருவதுடன், பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணவும், அரசின் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைவதை உறுதி செய்திடவும், “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்”, “கள ஆய்வில் முதலமைச்சர்” போன்ற திட்டங்களையும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், பெண்களுக்கான விடியல் பயணத் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன், இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும் 48 போன்ற முன்னோடி திட்டங்களையும் இவ்வரசு அறிவித்து சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் மக்களை சென்றடையும் வகையிலும், நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்திடவும், "மக்களுடன் முதல்வர்" என்ற புதிய திட்டம் இன்றையதினம் கோயம்புத்தூரில் முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது.

“மக்களுடன் முதல்வர்“” என்ற இப்புதிய திட்டத்தின் கீழ், பொதுமக்கள் அதிகமாக அணுகும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நகராட்சி நிர்வாகத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கூட்டுறவுத்துறை, மகளிர் மேம்பாட்டுக் கழகம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, எரிசக்தி துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை ஆகிய 13 அரசுத் துறைகள் சார்ந்த கோரிக்கைகளைப் பெற்று தீர்வு காண்பதற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் நேரடிக் கண்காணிப்பில், அனைத்து நகர்ப்புற, மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு மற்றும் கிராம ஊராட்சி அளவில், அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.

அனைத்து தரப்பு மக்களுக்கும் மேற்கண்ட 13 அரசுத் துறைகளின் சேவைகள் எளிதில் கிடைத்திடவும், தாமதங்களை தவிர்த்திட வேண்டும் என்பதும் தான் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

“மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக வரும் 18.12.2023 ஆம் தேதி முதல் 6.1.2024 வரை அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகரப்புறங்களை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகளில் 1745 முகாம்கள் நடத்தப்படும்.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் முடிவுற்றவுடன், 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வாரத்திலிருந்து 31-1-2024 வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.

முதற்கட்டமாக, நகர்ப்புறங்களில் நடத்தப்படும் முகாம்கள் முடிவுற்ற பின்னர், அடுத்த கட்டமாக, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஊரகப் பகுதிகளில் இந்த முகாம்கள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு முகாம்களில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் அனைவரும் ஒரே குடையின்கீழ் மக்களின் கோரிக்கைகளைப் பெற்று பதிவு செய்வார்கள். முகாம்களில் பெறப்படும் மனுக்கள் அனைத்தும், சம்பந்தப்பட்ட துறைகளால் 30 தினங்களுக்குள் உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியின் அடிப்படையில் உரிய சேவைகள் மக்களுக்கு வழங்கப்படும்.

இந்த நிகழ்ச்சியில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி, முதல்வரின் முகவரி திட்ட சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதீஷ், மக்களுடன் முதல்வர் சிறப்புப் பணி அலுவலர் மதுசூதன் ரெட்டி, கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 18 Dec 2023 8:16 AM GMT

Related News