மயிலாடுதுறை மாவட்டத்தில் பலத்த மழையால் மீன் பிடி தொழில் பாதிப்பு
மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால் மீன் பிடி தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது.
HIGHLIGHTS
மயிலாடுதுறை மாவட்டத்தில் மூன்று தினங்களுக்கு அதி கன மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் அதிகன மழை காரணமாக கடந்த 3 நாட்களுக்கும் மேலாக தரங்கம்பாடி தாலுகாவில் 10க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடி தொழிலுக்கு செல்லவில்லை.
மேலும் 3500க்கும் மேற்பட்ட தங்கள் படகுகளை கரை ஓரம் நிறுத்தியுள்ளனர். கனமழை காரணமாக தரங்கம்பாடி சுனாமி குடியிருப்பு பகுதியில் பாரதியார் விதி, ரவீந்தரநாத் தாகூர் விதி எம்.ஜி.ஆர். வீதி, நேரு வீதி, திருவள்ளுவர் வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் வடிய வழியின்றி தேங்கி உள்ளது. முறையான வடிகால் வசதி இல்லாத காரணத்தால் குடியிருப்புக்களை மழை நீர் சூழ்ந்துள்ளது.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது, இதனால் சுகாதார சீர்கேடும் ஏற்படும் சூழல் உள்ளது. இதே போன்று நேற்று மாலை பெய்த அதி கனமழை காரணமாக பொறையார் கடைவீதியில் மழை நீர் வடியாமல் குளம் போல் தேங்கி நின்றது. இதனால் வணிகர்கள் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்தனர். பல பகுதிகளில் மழை நீர் வடிய வழி இல்லாமல் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளதால் மக்கள் அவதி அடைந்துள்ளனர்.