மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் முன் துப்புரவு பணியாளர்கள் மறியல்
மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் முன் துப்புரவு பணியாளர்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.
HIGHLIGHTS
மயிலாடுதுறை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இங்கு சேகரிக்கப்படும் குப்பைகள் ஆனந்ததாண்டவபுரம் சாலையில் உள்ள குப்பைக்கிடங்கில் சேமிக்கப்பட்டு வந்தது. இங்கு குப்பைகள் அதிக அளவில் தேங்கியதால், அங்கு குப்பைகளைக் கொட்ட நீதிமன்றம் தடைவிதித்துள்ளதால், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் மக்கும் குப்பை, மக்காக்குப்பை என தரம் பிரிப்பததற்காக 6 இடங்களில் நுண்ணுயிரி கிடங்குகள் ஏற்படுத்தப்பட்டன. ஆனால், அவை சரியாக செயல்படாத காரணத்தால், குப்பைகள் அனைத்தும் பொது இடங்கள், சுடுகாடு, ஆற்றங்கரை, சாலையோரங்களில் கொட்டப்பட்டு வருகிறது.
குப்பைகளை பொது இடங்களில் கொட்டும்போது தூய்மைப் பணியாளர்கள் பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாகின்றனர். இந்நிலையில் குப்பைக்கிடங்கில் குப்பைகளை கொட்ட அனுமதிக்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், குப்பைகளை சேகரிப்பதற்கான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படாததைக் கண்டித்தும் தூய்மைப் பணியாளர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் நகரமன்ற தலைவர் செல்வராஜ் மற்றும் நகராட்சி ஆணையர் பாலு பேச்சுவார்த்தை நடத்தி, குப்பைகளை கொட்ட நிரந்தர இடத்தை விரைவில் ஒதுக்கித் தருவதாக உறுதி அளித்ததன் பேரில் துப்புரவு பணியாளர்கள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு கலைத்து சென்றனர். இந்த போராட்டத்தால் மயிலாடுதுறை-தரங்கம்பாடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.