காப்பீட்டுத்திட்டத்தில் உயிர்காக்கும் சிகிச்சை பெறணுமா..? அப்படின்னா இதை தெரிஞ்சுக்கங்க..!
Kappettu Thittam-தமிழக அரசும், மத்திய அரசும் இணைந்து சாதாரண மக்கள் உயர் சிகிச்சை பெறுவதற்கான காப்பீட்டுத்திட்டம் செயல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது.
HIGHLIGHTS
Kappettu Thittam-தமிழகத்தில் வறுமைக்கோட்டுக்குள் வாழும் சாதாரண மக்கள் தங்களது உயர் சிகிச்சைகளுக்கு மருத்துவ செலவை எதிர்கொள்ளமுடியாமல் பல உயிரிழப்புகளை சந்தித்துள்ளனர். சாதாரண ஏழை,எளிய, நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் ஒரு திட்டம் கொண்டுவர அரசு திட்டமிட்டது.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சைகளை, ஏழை மற்றும் குறைந்த வருவாய் பெறும் பொதுமக்கள் கட்டணமில்லாமல் பெற வேண்டும் என்ற உயரிய நோக்குடன், உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான முதலமைச்சர் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் 23.07.2009 அன்று தமிழக அரசால் கொண்டுவரப்பட்டது.
மத்திய அரசின், பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம், 23.09.2018 தொடங்கப்பட்ட முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டமும் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இத்திட்டம் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் பச்சிளங் குழந்தைகளுக்கான சிகிச்சை முறை உள்பட 1,090 சிகிச்சைகளுக்கு மருத்துவ சிகிச்சை பெறவும், 8 தொடர் சிகிச்சை வழிமுறைகளுக்கும் மற்றும் 52 பரிசோதனை முறைகளுக்கும் வழி வகை செய்யப்பட்டுள்ளது. 800 அரசு மற்றும் 900 தனியார் மருத்துவமனைகள் சிகிச்சைக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
பயன்கள் :
தமிழக அரசின் பல்வேறு நல வாரியங்களின் உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள்
குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ. 72000க்கும் குறைவாக உள்ள அனைத்துக் குடும்பங்கள்
மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் பயன்பெற புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை பெறுவதற்கு பதிவு செய்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். அடையாள அட்டைதான் சிகிச்சைக்கான அங்கீகரிக்கப்பட்ட ஆவணமாக கருதப்படும்.
இத்திட்டத்தின் படி ஒரு குடும்பம் ஒரு ஆண்டிற்கு ரூ.5,00,000/- வரை கட்டணமின்றி மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம்.
இத்திட்டத்தின் மூலம் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்படும் நோய்கள்:
- இதய மற்றும் இதய நெஞ்சக அறுவை சிகிச்சை
- புற்று நோய் மருத்துவம்
- சிறுநீரக நோய்கள்
- மூளை மற்றும் நரம்பு மண்டலம்
- முடநீக்கியல் அறுவை சிகிச்சைகள்
- கண் நோய் சிகிச்சை
- இரத்தக் குழாய்களுக்கான அறுவை சிகிச்சை
- ஒட்டுறுப்பு (பிளாஸ்டிக்) அறுவை சிகிச்சைகள்
- காது, மூக்கு, தொண்டை
- கருப்பை நோய்கள்
- இரத்த நோய்கள்
- இதர பிற நோய்கள்
தைராய்டு சுரப்பி அறுவை சிகிச்சை, விபத்து மற்றும் இதர காயங்களுக்கு உள்நோயாளி சிகிச்சை தேவைப்படும் பெரிய அளவிலான அறுவை சிகிச்சைகள், கோமா மற்றும் மூளைக் காய்ச்சல் நோய்களுக்கு மருத்துவம், பிறவிக் குறைபாடுகளுக்கான அறுவை சிகிச்சைகள் போன்றவை ஆகும்.
தற்போது இந்தக் காப்பீட்டுத் திட்டத்தை அரசின் சார்பாக நடைமுறைப்படுத்தி வருவது இந்திய நிறுவனமான யுனைடெட் காப்பீட்டு நிறுவனம் ஆகும். தமிழக அரசால் அனுமதிக்கப்பட்ட தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே மருத்துவ சிகிச்சைகள் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சைகளுக்கான மருத்துவச் செலவுகள் அனைத்தும் ஒன்றிணைத்து ஒரே தொகையாக குறிப்பிட்ட மருத்துவமனைக்கு மருத்துவச் செலவுகள் ஈடு செய்யப்படும்.
இத்திட்டம் பற்றிய விவரங்களை அறிவதற்கும் குறைகளை தொிவிப்பதற்கும் 24 மணி நேரம் தொடர்ந்து இயங்கி கொண்டிருக்கும் கட்டணமில்லா அழைப்பு மையத்தை தொலைபேசி எண்: 1800 425 3993 மூலம் தொடர்பு கொள்ளலாம்.
மேலும், இந்த திட்டம் குறித்த விரிவான தகவல்களைபெறுவதற்கு https://www.cmchistn.com/features_ta.php என்கிற இணையதளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
இந்த திட்டம் சாதாரண மக்களுக்கு பல நன்மைகளை அளிக்கும் திட்டம் என்பதால் மக்கள் மத்தியில் வரவேற்கப்பட்ட திட்டமாக இது இருந்துவருகிறது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2