கோவையில் பன்றி வளர்ப்போர் ஆர்ப்பாட்டம்
Coimbatore News, Coimbatore News Today-தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு பன்றிகளை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டதை கண்டித்து பன்றி வளர்ப்போர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
HIGHLIGHTS
Coimbatore News, Coimbatore News Today- தமிழகத்தில் கோவை, திருச்சி, குமரி, நெல்லை உள்பட பல்வேறு இடங்களில் பன்றி வளர்ப்பு பண்ணை உள்ளது. இங்கு வளர்க்கப்படும் பன்றிகள் கேரளாவிற்கு கொண்டு செல்லப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
பன்றி வளர்ப்பு, வருமானம் ஒரு தொழிலாக மாறி வருகிறது. பன்றி வளர்ப்பை இழிவாக கருதுபவர்களுக்கு மத்தியில் ஒரு தரப்பினர், அதிக வருமானம் தரும் பன்றி வளர்ப்பை, ஒரு தொழிலாக மட்டுமே கருதி, மாதந்தோறும் அதிக வருமானம் ஈட்டுகின்றனர். இதற்காக, பண்ணைகள் உருவாக்கப்பட்டு, நுாற்றுக்கணக்கான பன்றிகள், ஆரோக்கியமான நிலையில் வளர்க்கப்படுகிறது. தமிழகத்தில் பன்றி இறைச்சியை பலரும் அருவறுப்பாக நினைத்தாலும், பல நாடுகளில் பன்றி இறைச்சி முக்கிய அசைவ உணவாக வரவேற்கப்படுகிறது. பலரும் அசைவ விருந்துகளில், பன்றி இறைச்சிக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றனர். அதுவும், தமிழகத்தில் வளர்க்கப்படும் பன்றிகளின் இறைச்சி கூடுதல் சுவை என, வெளிநாடுகளில் இறக்குமதி செய்யப்படும் பன்றி இறைச்சிக்கு நல்ல கிராக்கி உள்ளது. அதிகமான வருவாயும் கிடைக்கிறது.
இதனால், தமிழகத்தில் பன்றி வளர்ப்பில் ஈடுபட்டுள்ள பண்ணை பன்றி வளர்ப்பாளர்கள், அதிக எண்ணிக்கையில் வெளிநாடுகளுக்கு பன்றிகளை ஏற்றுமதி செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு பன்றிகள் கொண்டு செல்ல கேரள அரசு தடை விதித்துள்ளது. இதனால் தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு பன்றிகளை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் கேரள அரசை கண்டித்து தமிழக பன்றி வளர்ப்போர் சங்கத்தினர் கோவை-கேரள எல்லையான 11 சாவடியில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு மாநிலச் செயலாளர் ஞானபிரகாஷ் தலைமை வகித்தார். இதில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில், கேரள அரசுக்கு எதிரான கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இதுகுறித்து பன்றி வளர்ப்போர் சங்கத்தினர் கூறியதாவது;
தமிழகத்தில் வளர்க்கப்படும் பன்றிகள் கேரளா கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து 44 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த பன்றி இறைச்சிக்கு சான்றிதழ் அளிக்கும் மத்திய அரசின் நிறுவனமான எம்.பி.ஐ. கேரளாவில்தான் உள்ளது. எனவே அவர்கள் சான்றிதழ் கொடுத்தால் மட்டுமே, பன்றி இறைச்சியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும். ஆனால், தமிழகத்தில் இருந்து பன்றிகளை கொண்டு செல்ல, கேரள அரசு கடந்த 6 மாதமாக தடை விதித்து உள்ளது. இதனால் தமிழகத்தில் 200 டன்னுக்கு மேல் பன்றி இறைச்சி தேங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதை கருத்தில் கொண்டு பன்றிகளை கொண்டு செல்ல விதித்த தடையை கேரள அரசு நீக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, தமிழக அரசு உடனடியாக கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பன்றி வளர்ப்போர் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.