ரோட்டோர டீக்கடைக்குள் புகுந்த லாரி; தாராபுரம் அருகே 3 பேர் உயிரிழப்பு
A lorry rammed into a tea shop, 3 people were killed, Tirupur News Today- திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே ரோட்டோரத்தில் இருந்த டீக்கடைக்குள் புகுந்த லாரியால், 3 பேர் உயிரிழந்தனர்.
HIGHLIGHTS
lorry rammed into a tea shop, 3 people were killed, Tirupur News Today- திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த குண்டடம் அருகே உள்ள சூரியநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கலாமணி. இவர் குண்டடம்- திருப்பூர் ரோட்டில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
இன்று காலை வழக்கம் போல் டீக்கடையில் ஏராளமானோர் டீ அருந்தி கொண்டிருந்தனர். இந்நிலையில் காலை 7.30 மணி அளவில் கரூரில் இருந்து சிமெண்ட் கலவை லோடு ஏற்றிய லாரி ஒன்று திருப்பூர் நோக்கி வந்தது. லாரியை சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த ரத்தினகுமார் (28) என்பவர் ஓட்டி வந்தார். லாரி சூரியநல்லூர் பகுதியில் வந்து கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த கலாமணியின் டீக்கடைக்குள் புகுந்தது. இதில் கடையில் டீ அருந்திக் கொண்டிருந்த பத்துக்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். உயிருக்கு போராடிய அவர்கள் அலறி கூச்சலிட்டனர்.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள், குண்டடம் போலீசாருக்கும் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்து அந்த இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பொதுமக்கள் உதவியுடன் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர்.
இதில் முத்துச்சாமி(65) சுப்பன் (70) மற்றும் லாரி டிரைவர் ரத்தினகுமார் 3 பேரும், அந்த இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தனர். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி, மகேந்திரன், மாணிக்கம், செல்லமணி ஆகிய 4 பேரையும் படுகாயங்களுடன் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த பயங்கர விபத்து குறித்து குண்டடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்மூடித்தனமான வேகத்தில் இயக்கப்படும் வாகனங்கள்
குண்டடம் - திருப்பூர் ரோட்டில், செல்லும் வாகனங்களின் வேகம், கட்டுக்கடங்காமல் இருப்பது தொடர்கதையாக இருந்து வருகிறது. டூவீலர்கள், கார்கள், பஸ்கள், வேன்கள், லாரிகள் என இவ்வழித்தடத்தில் இயக்கப்படும் வாகனங்கள் பெரும்பாலும் கட்டுப்பாடற்ற, கண்மூடித்தனமான வேகத்தில் இயக்கப்படுகின்றன. இந்த கோர விபத்துக்கு காரணம், கட்டுப்பாடற்ற வேகத்தில் வந்த லாரி, தனது கட்டுப்பாட்டை இழந்த நிலையில்தான், டீக்கடைக்குள் புகுந்து 3 பேர் உயிரை பழிவாங்கி விட்டது. இவ்வழித்தடத்தில் இயக்கப்படும் அனைத்து ரக வாகனங்களின் வேகத்தையும் கட்டுப்படுத்த, போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குண்டடம் பகுதி மக்கள் கூறினர்.