மேட்டூர் அணை நீர்மட்டம் 110.77 அடியாக சரிந்தது: விவசாயிகள் பெரும் கவலை..!
மேட்டூர் அணையில் அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை வேகமாக சரிந்து வருகிறது. இதனால் பாசன விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
HIGHLIGHTS
சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழை பெய்து வந்தது. இதன் காரணமாக அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்தது.
இதைத்தொடர்ந்து, 2022 மே மாதம் 24-ல் காவிரி டெல்டா பாசனத்தில் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக, மேட்டூர் அணைக்கு வரும் நிர்வரத்து அதிகரித்துள்ளது.
இதன்படி, மேட்டூர் அணைக்கு நேற்று காலை 2,597 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 5,661 கன அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து காவிரியில் குறுவை சாகுபடிக்கு 15 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் குறைந்து வருகிறது.
இந்நிலையில், நேற்று 111.35 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று 110.77 அடியாக சரிந்துள்ளது. அணையில் தற்போது 79.50 டி.எம்.சி. அளவு தண்ணீர் இருப்பு உள்ளது. இதனால் பாசனப்பகுதி விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர். மேலும், கோடை வெய்யில் வாட்டும் நிலையில், பயிர்களை காக்க மேட்டூர் அணை நீர் பாசன கால்வாய்கள் மூலம் வயல்களுக்கு வந்து சேருமா? என, எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.