அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் பயங்கர மோதல்: ஓ.பி.எஸ் ஆதரவாளர் தலையில் ரத்தம் கொட்டியது..!
அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் ஓற்றை தலைமை கோஷத்தால் தொண்டர்கள் மோதிக்கொண்டதில் பன்னீர்செல்வம் ஆதரவாளர் தலையில் ரத்தம் கொட்டியது.
HIGHLIGHTS
நடிகராக, வாழ்க்கையை தொடங்கிய எம்.ஜி.ராமச்சந்திரன், தி.மு.க.,வில் இருந்து வெளியேறினார். ராமலிங்கம் என்பவர் பதிவு செய்து வைத்திருந்த அ.தி.மு.க என்னும் பெயரில் 1972 அக்டோபர் 17 ல் புதிய கட்சியை தொடங்கினார். எம்.ஜி.ஆர் பாடுபட்டு வளர்த்த, ஜெயலலிதா கட்டிக்காப்பாற்றிய அ.தி.மு.க, தற்போது இடைப்பாடி பழனிச்சாமி, பன்னீர்செல்வம் ஆகியோரின் பதவி சண்டையால் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதாக உண்மையான எம்.ஜி.ஆர், ஜெயல்லிதா விசுவாசிகள் வேதனை தெரிவித்தனர்.
இதற்கு அச்சார விதை போடும் சம்பவமாக பன்னீர் செல்வம் ஆதரவாளர் மண்டை அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் இன்று உடைக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. அ.தி.மு.கவில் ஒற்றைத்தலைமை என்னும் கோஷம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. ஓ.பன்னீர்செல்வம், இடைப்பாடி பழனிச்சாமி இடையே கருத்து வேறுபாடு நீங்குமா? யார் மத்தியஸ்தம் செய்து வைப்பது என்பது தான் தற்போது பிரதான கேள்வி!
இந்நிலையில் அ.தி.மு.க அலுவலகத்திற்கு கட்சி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்களுடன் இன்று வந்தார். சில நிமிடங்களில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வந்த போது ஆதரவு மற்றும் எதிர்ப்பு கோஷங்களை தொண்டர்கள் எழுப்பினர். இதைத்தொடர்ந்து இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டனர். இதில் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
இந்த பரபரப்பான சூழலில், கட்சி தலைமை அலுவலகத்தில் ஜெயக்குமார், சண்முகம் ஆகியோருடன் பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார். முன்னதாக, ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் தேனிமாவட்ட செயலர் சையதுகான், விருதுநகர் மாவட்ட செயலர் சாத்தூர் ரவிச்சந்திரன், கன்னியாகுமரி மாவட்ட செயலர் அசோகன், திருச்சி மாவட்ட செயலர் வெல்லமண்டி நடராஜன், இணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம், மைத்ரேயன், மனோஜ் பாண்டியன் , முன்னாள் எம்எல்ஏ., சிவகாசி பாலகங்காதரன், கோவை செல்வராஜ், உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்.
இதுபோல் எதிர்க்கட்சி தலைவரும், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிச்சாமி தமது வீட்டில், முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, முக்கூர் சுப்பிரமணியன் மற்றும் சேலம் மாவட்ட செயலர் இளங்கோவன், முன்னாள் அமைச்சர்கள், வைகைச்செல்வன் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினர்.