மாரியம்மனுக்கு பொங்கல் வைங்கம்மா..! கால்பந்து வீராங்கனை மாரியம்மாளுக்கு ஆபரேஷன் சக்சஸ்..!
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இந்திய மகளிர் கால்பந்து அணி வீராங்கனைக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
HIGHLIGHTS
திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 49). நெசவு தொழிலாளி. இவரது மகள் மாரியம்மாள் (19). இவர் இந்திய மகளிர் கால்பந்து அணிக்காக விளையாடி வருகிறார். இவர் நடப்பாண்டு ஈரானில் நடந்த ஆசிய கால்பந்து லீக் போட்டியிலும், கடந்த 2021-ம் ஆண்டு பிரேசில் மற்றும் சுவீடன் நாட்டில் நடந்த நட்பு ரீதியான கால்பந்து போட்டிகளிலும் பங்கேற்று 12 கோல்கள் அடித்துள்ளார்.
விளையாட்டு வீராங்கனை மாரியம்மாள் கடந்த 8 வருடங்களாக கால்பந்து விளையாட்டில் சாதனை படைத்து வருகிறார். பெங்களூரு 'கேலோ-இந்தியா' போட்டிக்காக சென்னை விளையாட்டு அரங்கத்தில் மாரியம்மாள் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டு இருந்தார். அப்போது, அவரது இடது முட்டியின் சவ்வு கிழிந்ததில் பெரிதும் அவதிப்பட்டார்.
இதையடுத்து, தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையச் செயலாளர் அபூர்வா பரிந்துரைப்படி, அவர் ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு மூட்டு உள்நோக்கி கருவி துறை, விளையாட்டு காயத்துறையின் தலைவர் டாக்டர் லெனார்டு பொன்ராஜ் தலைமையிலான மருத்துவக்குழுவினர் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். இதையடுத்து, வீராங்கனை மாரியம்மாள் தற்போது நலமுடன் உள்ளதாக மருத்துவக்குழுவினர் குறிப்பிட்டனர்.