மயிலாடுதுறை நகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் தர்ணா போராட்டம்
மயிலாடுதுறை நகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடத்தினர்.
HIGHLIGHTS
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இவற்றில் 80க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தினக்கூலியாக ரூ.340 ரூபாய் வழங்கப்படும் நிலையில் அதில் 10 ரூபாய் சேமநல நிதியாக பிடித்தம் செய்யப்படுகிறது. இந்நிலையில், பிப்ரவரி மாத சம்பளம் அவர்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை. இதனைக் கண்டித்து மயிலாடுதுறை நகராட்சி வரதாச்சாரியார் பூங்காவில் தூய்மைப் பணியாளர்கள் தங்கள் பணியை புறக்கணித்து இன்று காலை முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நிலுவை சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும், சம்பள பில் வழங்க வேண்டும், பி.எஃப் பிடிமானம் செய்யப்பட்டதற்கான கணக்கு தர வேண்டும், தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், நகராட்சியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க தலைவர் அம்பேத்கர், துணை செயலாளர் ராஜசேகர், துணைத்தலைவர் முருகவேல் ஆகியோர் தலைமையில் தூய்மைப் பணியாளர்கள் முழக்கங்களை எழுப்பினர்.