தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டும் அனுமதி: திருவண்ணாமலை நகராட்சி அதிரடி
தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு மட்டும் அனுமதி சீட்டு திருவண்ணாமலை நகராட்சி அதிரடி
HIGHLIGHTS
அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு தடையில்லாமல் கிடைக்க வேண்டும் என்பதற்காக வாகனங்கள் மூலமாக காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள் முதலியவற்றை மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு எடுத்துச்செல்ல வியாபாரிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. இதற்கு அந்தந்த நகராட்சி பகுதிகளில் அதிகாரிகளிடம் அனுமதி பெறவேண்டும். சென்னை உட்பட பல நகரங்களில் இத்திட்டம் நேற்று துவக்கப்பட்டது.
ஆனால் திருவண்ணாமலையில் இந்த திட்டம் துவக்கப்படவில்லை. இதுகுறித்து வியாபாரிகளிடம் விசாரித்ததில் வீடுகளுக்கு டோர் டெலிவரி செய்பவர்கள் காய் பழங்கள் விற்பவர்கள் கண்டிப்பாக தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும். அப்போதுதான் அனுமதி சீட்டு வழங்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்ததாக கூறினார்கள். நகராட்சி அதிகாரிகள் இது குறித்து தெரிவிக்கையில் பலர் இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என தெரிவித்தனர்.
வியாபாரிகள் பலர் வயதானவர்கள், இணை நோய் உள்ளது எனக்கூறி தடுப்பூசி போட்டுக்கொள்ள படுவதாகவும் தெரிவித்தனர். இன்று நகராட்சி அதிகாரிகள் வணிகர் சங்க நிர்வாகிகளிடம் பேசி தடுப்பூசியின் அவசியத்தை எடுத்துக் கூறுமாறு அவர்களுக்கு கவுன்சிலிங் நடத்தி அவர்களை தடுப்பூசி போட்டுக்கொள்ள செய்யவேண்டுமென கூறி அனுமதி சீட்டு வழங்கத் துவங்கியுள்ளனர்.