கும்ப மரியாதை அளித்து மாணவர்களை வரவேற்ற ஆசிரியர்கள்
ஆரணி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இன்று பள்ளிக்கு சேர்ந்த மாணவ மாணவிகள் மரக்கன்றுகளை நட்டனர்.
HIGHLIGHTS
தமிழ்நாடு முழுவதும் கோடை விடுமுறை முடிந்து, ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அரசு பள்ளி மாணவர்களுக்கு முதல் நாளிலேயே, விலையில்லா பாடப்புத்தகங்கள் போன்றவற்றை வழங்க மாவட்டம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கநிலைப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி உயர்நிலைப் பள்ளி என மொத்தம் 2545 பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. இதில் நகராட்சி டவுன்ஹால் நடுநிலை பள்ளியில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பள்ளிக்கு வந்த மாணவர்களை வாழ்த்துக்கள் தெரிவித்தார். பின்னர் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். அதனைத்தொடர்ந்து முதலாம் வகுப்பிற்கு சென்று மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கியும் மற்றும் விலையில்லா பாடப்புத்தகங்களையும் வழங்கினார்.
மேலும் பள்ளி மாணவர்களிடையே ஆட்சியர் முருகேஷ் மாணவர்கள் அனைவரும் நன்றாக படிக்கவேண்டும் அப்போது தான் நீங்கள் அரசு அதிகாரிகள் மற்றும் நீங்கள் விருப்படும் வேலைக்கு செல்லமுடியும் என்று தெரிவித்தார். மேலும் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மீண்டும் பள்ளிக்கு வந்த மாணவிகளுக்கு ஆசிரியர்கள் கும்பமரியாதை அளித்து வரவேற்றனர்.
அதனைத்தொடர்ந்து பள்ளிகள் அனைத்தும் காலை 9.10 மணி முதல் மாலை 4.10 மணி வரையில் 8 பாட வேளைகளாக ஒரு நாளைக்கு 7 மணி நேரம் வகுப்புகள் நடத்த திட்டமிட்டு, அதற்கான அட்டவணை பள்ளிக்கல்வித்துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது. 2022-23ம் கல்வியாண்டு நாட்காட்டியில் (Academic Calendar) உள்ள நாட்களில், தலா 40 நிமிடங்களுக்கு எட்டு அமர்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகராட்சி பெண்கள் பள்ளியில் ஆசிரியர்கள் மாணவியர்களை பூரண கும்ப மரியாதை அளித்து வாழ்த்தி வரவேற்றனர். ஆரணி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இன்று பள்ளிக்கு சேர்ந்த மாணவ மாணவிகள் மரக்கன்றுகளை நட்டனர். பள்ளி தலைமை ஆசிரியை தாமரைச்செல்வி, முதல் நாள் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு பூங்கொத்து, இனிப்புகள் வழங்கி வரவேற்றார்
12ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 20-ஆம் தேதியும், 11ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 27-ஆம் தேதியும் வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன.