பள்ளி கட்டிடம் சேதம்: கிராம சேவை மைய கட்டிடத்தில் படித்து வரும் மாணவர்கள்
பள்ளி கட்டிடத்தை இடித்து அல்லது வேறு இடத்தில் அரசு மூலம் தரமான புதிய கட்டிடத்தை கட்டி தர நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒன்றியத்தில் பாலியப்பட்டு ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் 1,200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த கிராம மக்கள் நெல், கரும்பு, மணிலா மற்றும் பூ வகைகளை பயிர் செய்வது விவசாய தொழிலை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர்.
பாலியப்பட்டு ஊராட்சி அலுவலகம் அருகில் அரசு நிதி உதவி பெறும் தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி கடந்த 1942-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகின்றது. ஊராட்சியில் இந்த ஒரு அரசு நிதி உதவி பெறும் தொடக்கப்பள்ளி மட்டுமே செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளி தொடங்கப்பட்ட காலக்கட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வந்தனர்.
இந்த ஊராட்சியில் உள்ள பெரும்பாலான மக்கள் இந்த தொடக்கப்பள்ளியில் படித்தவர்களே ஆவர். தற்போது இந்தப் பள்ளியின் நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியின் கட்டிடங்கள் முழுவதும் சேதமடைந்து எப்பொழுது யார் தலையில் விழும் என்று அச்சத்திலேயே மாணவ மாணவிகள் பல ஆண்டுகளாக பயின்று வருகின்றனர்.
இந்த அரசு உதவி பெறும் பள்ளியின் கட்டிட நிலை குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கலெக்டர், கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களுக்கும் அதிகாரிகளுக்கும் பள்ளியை தரம் உயர்த்த வேண்டும் என்றும் தற்போதுள்ள பள்ளி கட்டிடத்தை இடித்து அல்லது வேறு இடத்தில் தரமான தற்பொழுது உள்ள சூழ்நிலைக்கு ஏற்ப நல்ல கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் பலமுறை கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
ஆனால் இதுநாள் வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். தற்போது இந்த அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் சுமார் 77 மாணவ, மாணவிகள் மட்டுமே ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர்.
பாழடைந்த பாதுகாப்பற்ற சூழலில் உள்ள பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு பாடம் நடத்தக்கூடாது என கிராம மக்கள் ஒன்று சேர்ந்து கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் இயற்றி பள்ளியின் வகுப்பறைகளுக்கு பூட்டு போட்டதாக கூறப்படுகிறது.
மேலும் தற்போது மாணவ, மாணவிகளின் கல்வித்தரம் பாதிக்கப்படக்கூடாது என ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் உள்ள நூலக கட்டிடம் மற்றும் கிராம சேவை மைய கட்டிடத்தில் ஆசிரியைகள் பாடம் நடத்தி வருகின்றனர். இப்பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்றால் அருகில் உள்ள வேடியப்பனூர், அடிஅண்ணாமலை, கோலாப்பாடி ஆகிய கிராமங்களுக்கு தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
எனவே மாணவர்களின் நலன் கருதி தற்போது உள்ள பள்ளி கட்டிடத்தை இடித்து அல்லது வேறு இடத்தில் அரசு மூலம் தரமான புதிய கட்டிடத்தை கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அரசு நிதி உதவி தொடக்கப் பள்ளியாக செயல்பட்டு வரும் இந்த பள்ளியை உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தி பாலியப்பட்டு ஊராட்சியில் உள்ள மாணவ மாணவிகள் வேறு கிராமத்திற்கு சென்று படிக்காமல் தங்கள் கிராமத்திலேயே படிக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளி கல்வித்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், மாவட்ட நிர்வாகத்திற்கும் , பள்ளி கல்வித்துறைக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், பாலியப்பட்டு ஊராட்சியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளியினை முதன்மை கல்வி அலுவலர் மற்றும் அலுவலர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மேலும் அந்த பள்ளிக்கு மாற்று கட்டிடம் அமைப்பதற்கு இடத்தை பார்வையிட்டு உள்ளனர். மேலும் அரசு புறம்போக்கு இடம் ஏதேனும் உள்ளதா என்று மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டு அறியப்பட்டு வருகிறது . இடம் தேர்வான பிறகு மாவட்ட கலெக்டர் மூலம் பள்ளி கட்டிடம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என கூறினர்.