திருவண்ணாமலை மாவட்டத்தில் 27 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு
திருவண்ணாமலை மாவட்டத்தில் 27 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடப்பு சொர்ணவாரி பருவத்தில் நெல் சாகுபடி செய்து உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் 27 இடங்களில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்பட உள்ளது.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பதிவு செய்தல் மற்றும் கொள்முதல் செய்தல் ஆகியவற்றிற்கான நெறிமுறைகளும் தெரிவிக்கப்பட்டது. தற்போது நிர்வாக காரணங்களுக்காகவும் விவசாய மக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகள் அடிப்படையிலும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கீழ்பென்னாத்தூர் தாலுகாவில் கரிக்கலாம்பாடி, செங்கம் தாலுகாவில் மேல்செங்கம் ஆகிய இடங்களுக்கு மாற்றாக ஆரணி தாலுகாவில் குன்னத்தூர் மற்றும் செங்கம் தாலுகாவில் கண்ணக்குருக்கை ஆகிய இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்பட உள்ளது.
நெல் விற்பனை செய்ய விருப்பும் விவசாயிகள் தொடர்புடைய நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நேரில் சென்று முன்பதிவு செய்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.