திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் வயதான தம்பதி தீக்குளிக்க முயற்சி
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வயதான தம்பதியினர் தீக்குளிக்க முயற்சி செய்தனர்.
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த வடுக்க சாத்து பகுதியைச் சேர்ந்தவர் சுப்பராயன் வயது (85), இவருடைய மனைவி தும்பா (வயது 60).மூத்த மகன் இவர்களை ஏமாற்றி சொத்துக்களை எழுதி வாங்கி கொண்டார்.பத்திரம் பதிவு செய்து கொண்ட நாள் முதல் இதுவரை வயதான சுப்பராயன் மற்றும் அவரது மனைவி தும்பா ஆகிய இருவருக்கும் இருப்பிடம் மற்றும் உணவு உடைகள் உள்ளிட்டவை வழங்காமல் அலைக்கழித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட சுப்பராயன் அவரது மனைவி தும்பா ஆகிய இருவரும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போலியாக பத்திரம் பதிவு செய்து கொடுத்த நிலத்தை மீட்டு தரக்கோரி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர். இதனை அறிந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மண்ணெண்ணெய் கேனை தடுத்து நிறுத்தி முதியவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த சில வாரங்களாக மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் தீக்குளிக்க முயற்சி செய்யும் சம்பவங்கள் அதிகளவில் நடைபெற்று வருகிறது. ஆனால் அவர்கள் மீது திடீரென தீப்பற்றி கொண்டால் அணைப்பதற்கு அங்கு எந்தவித அடிப்படை வசதிகளும், அவர்களை காப்பாற்றுவதற்கு காவல்துறையிடம் எந்தவித உபகரணமும் இன்றி குறைந்த அளவே காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் உள்ளனர். இதனால் அப்பகுதியில் தீயணைக்கும் உபகரணங்கள் மற்றும் அதிக அளவில் பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட வேண்டுமென மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.