நள்ளிரவில் பெய்த கனமழையால் நிரம்பியது குண்டேரிப்பள்ளம் அணை
Gunderipallam-நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஈரோடு மாவட்டம் குண்டேரிப்பள்ளம் அணை நிரம்பியது.
HIGHLIGHTS
Gunderipallam-ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த டி.என்.பாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் ஊராட்சி வினோபா நகர் பகுதியில் குன்றி மலையடிவாரத்தில் 42 அடி உயரத்தில் கடந்த 1980-ஆம் ஆண்டு குண்டேரிப்பள்ளம் அணை கட்டப்பட்டது. இந்த அணைக்கு குன்றி, விளாங்கோம்பை, கடம்பூர், மல்லியம்மன் துர்கம், உள்ளிட்ட வனப்பகுதியில் பெய்யும் மழை நீரானது 10-க்கும் மேற்பட்ட காட்டாற்று பள்ளங்கள் வழியாக குண்டேரிப்பள்ளம் அணைக்கு வந்தடைகிறது. இந்த அணையில் உள்ள இரு பாசன வாய்க்கால்கள் மூலமாக குண்டேரிப்பள்ளம், வினோபாநகர், கொங்கர்பாளையம், வாணிப்புத்தூர், இந்திராநகர், மோதூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 2 ஆயிரத்து 500 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
இந்நிலையில், குண்டேரிப்பள்ளம் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான குன்றி, கம்பனூர், விளாங்கோம்பை, கல்லூத்து ஆகிய பகுதிகளில் நள்ளிரவு 12 மணியளவில் பெய்த கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அணை நிரம்பி தண்ணீர் நிரம்பிய நிலையில் தற்போது கோடை காலத்தில் தண்ணீர் குறைந்து பள்ளங்களில் வரட்டு காணப்பட்ட நிலையில், நள்ளிரவில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக இன்று (புதன்கிழமை) காலை 6 மணி நிலவரப்படி 151 கன அடி தண்ணீர் குண்டேரிப்பள்ளம் அணைக்கு வந்தடைந்து அதன் முழு கொள்ளளவான (41.75 அடி) 42 அடியை எட்டி தண்ணீர் வெளியேறியது.
குண்டேரிப்பள்ளம் அணை பகுதியில் மழையளவு 96.மி.மீட்டர் பதிவாகியுள்ள நிலையில், அணை நிரம்பியதன் காரணமாக அணைக்கு வரும் நீர்வரத்து 151 கன அடி நீரானது அப்படியே உபரிநீராக வெளியேறியது. இந்த உபரி நீரானது வினோபாநகர் வழியாக கொங்கர்பாளையம், வாணிப்புத்தூர் பகுதிகளில் உள்ள இரண்டு தடுப்பணை வழியாக பவானி ஆற்றில் சென்று கலக்கிறது. மேலும், நேற்றிரவு குண்டேரிப்பள்ளம் அருகேயுள்ள வினோபாநகர் சுற்றுவட்டார பகுதிகளில் அடித்த சூறாவளி காற்றால் பயிரிடப்பட்ட மக்காச்சோளம் பயிர்கள் சாய்ந்து சேதமாகிய நிலையில் காணப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2