பர்கூர் மலைப்பகுதியில் யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு
யானை தாக்கி பலியான விவசாயி உடலை மீட்ட போலீசார் உடற்கூராய்வுக்கு அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பர்கூர் துருசனாம்பாளையம் பகுதியைச் சார்ந்தவர் தொட்டையன் என்கிற தொட்டமாதையன். இவர் தனக்கு சொந்தமான 4 ஏக்கர் விவசாய நிலத்தில் கேழ்வரகு பயிர் செய்துள்ளார்.
வனவிலங்குகள் பயிர்களை சேதம் செய்வதை தடுப்பதற்காக நேற்று நள்ளிரவு ஒரு மணி அளவில் தேக்க மரத்தூர் காட்டில் உள்ள தனது விவசாய தோட்டத்தில் பாதுகாப்பிற்காக இருந்தபோது நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவருக்கு பின்னால் இருந்து யானை தாக்கியதில் தொட்டையன் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.
இந்நிலையில் இன்று அதிகாலை 5.30 அளவில் அவரது உறவினர்கள் தோட்டத்துக்கு சென்று பார்த்த பொழுது தொட்டையன் யானை மிதித்து பலியாகி கிடந்தது தெரியவந்தது. உடனடியாக தொட்டையன் உறவினர்கள் இதுகுறித்து பர்கூர் வனச்சரக அதிகாரி மணிகண்டன் மற்றும் பர்கூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறை மற்றும் போலீசார் யானை மிதித்து பலியான தொட்டையன் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.