திருவண்ணாமலையில் டி.டி.வி. தினகரனின் மகள் திருமண விழா: சசிகலா பங்கேற்பு
திருவண்ணாமலையில் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனின் மகள் திருமண விழாவில் சசிகலா கலந்துகொண்டார்.
HIGHLIGHTS
அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனின் மகள் ஜெயஹரிணிக்கும், பூண்டி கிருஷ்ணசாமி வாண்டையாரின் மகன் ராமநாதனுக்கும் திருமணம் இன்று காலை திருவண்ணாமலைக்கு நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொள்வதற்காக நேற்று இரவு முன்னாள் அதிமுக பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா வந்திருந்தார்.
அவருக்கு அமமுக தொண்டர்கள் சார்பில் மிகப்பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. நேற்று நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் ஏராளமான தொண்டர்கள் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். திருமணம் நடைபெறும் இடங்கள் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு திருவண்ணாமலை பஸ்நிலையம் முதல் திருமணம் நடைபெறும் வேங்கிக்கால் பகுதிவரை கிட்டத்தட்ட 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இரவு பகல்போல் காட்சி அளித்தது.
திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று காலை திருமணம் நடைபெறுகிறது. இந்த திருமண விழா வி.கே.சசிகலா தலைமையில் நடைபெறுகிறது.
இதன் காரணமாக தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான அமமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கடந்த இரண்டு தினங்களாக திருவண்ணாமலையில் முகாமிட்டுள்ளனர். திருமணத்தை முன்னிட்டு நேற்று இரவு பெண் அழைப்பு அண்ணா நுழைவு வாயில் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் இருந்து நடைபெற்றது. மேளதாளங்கள் முழங்க குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் ஊர்வலமாக நடைபெற்றது.
ஏற்கனவே திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் உள்ள கல்யான சுந்தரேஸ்வரர் சன்னதியில் திருமணம் நடத்துவதாற்காக அனுமதிபெறப்பட்ட நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவும் மற்றும் இன்று அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை திபத்திருவிழாவை முன்னிட்டு பந்தகால் முகூர்த்தம் நடைபெற உள்ளதாலும், திருமணத்திற்கு அதிக அளவில் கட்சி பிரமுகர்கள், உறவினர்கள் கோவிலுக்குள் வருகை புரிவார்கள் என்பதாலும் திருமண நிகழ்வுகள் அனைத்தும் திருமண மண்டபத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும் திருமணம் முடிந்தவுடன் மணமக்கள் அண்ணாமலையார் திருக்கோவிலில் தரிசனம் மட்டும் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அதே நேரம் வி.கே.சசிகலாவும் அண்ணாமலையார் திருக்கோவிலில் தரிசனம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. திருமண விழாவையொட்டி கூட்டநெரிசலை தவிர்க்க திருவண்ணாமலை-வேலூர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.