திருவண்ணாமலை: நியாய விலை கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
காலி பணியிடங்களை நிரப்பக்கோரி அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தினர் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
HIGHLIGHTS
தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் திருவண்ணாமலை மாவட்டம் சார்பில் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சேகர் தலைமை தாங்கினார். செயலாளர் சண்முகம் முன்னிலை வகித்தார். பொருளாளர் ஜெய்சங்கர் வரவேற்றார்.
இதில் இணை செயலாளர் அண்ணாமலை, துணைத்தலைவர்கள் அன்பரசன், தனசேகரன், போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் மகாதேவன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் நியாய விலை கடைகளுக்கு புதிய 4ஜி விற்பனை முனையம் மற்றும் 4ஜி சிம்கார்டுகள் வழங்க வேண்டும். பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு ஊக்கத் தொகையாக குடும்ப அட்டை ஒன்றுக்கு ரூ.10 வழங்க வேண்டும்.
பதிவாளர் சுற்றறிக்கையின்படி எடையாளர்களில் இருந்து விற்பனையாளர் பதவி உயர்வும், விற்பனையாளர்களிலிருந்து அலுவலக எழுத்தர் பதவி உயர்வும் உடனடியாக வழங்கிவிட்டு நியாய விலை கடை பணியாளர்களின் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
பணியில் இருக்கும் போது இறந்த நியாய விலை கடை பணியாளர் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் நியாய விலை கடை பணியாளர்கள் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலையில் ஏ.ஐ.டி.யு.சி. சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்:
திருவண்ணாமலை மண்டல போக்குவரத்து கழக ஏ.ஐ.டி.யு.சி. மற்றும் ஓய்வு பெற்ற நல சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலை மண்டல போக்குவரத்து கழக அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்க தலைவர் முத்தையன் தலைமை தாங்கினார். துணை செயலாளர்கள் ஜெயபாலன், ஓம்கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் துணைத்தலைவர் மாதேஸ்வரன், மண்டல பொது செயலாளர் குப்புராங்கன், ஓய்வு பெற்றோர் நலச்சங்க மாநில செயலாளர் தங்கவேல், பொருளாளர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் காலி பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்ப வேண்டும். 2021 ஏப்ரல் முதல் ஓய்வு, விருப்ப ஓய்வு, இறந்து போன தொழிலாளர்களின் பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். ஊதிய ஒப்பந்த பலன்களை ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டும். அரசே பொறுப்பேற்று ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முடிவில் சங்க பொருளாளர் விஸ்வநாதன் நன்றி கூறினார்.