மாற்றுத்திறனாளிகள் இலவச மருத்துவ முகாம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்
ஆரணியில் 7-ந்தேதி நடக்க உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
HIGHLIGHTS
ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம், ஆரணி வட்டார வள மையம் இணைந்து 18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் வருகிற 7-ந்தேதி (வியாழக்கிழமை) ஆரணி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடக்க உள்ளது.
முகாம் குறித்து பொதுமக்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக ஆரணி கல்வி மாவட்ட அலுவலர் ஜி.சந்தோஷ் பங்கேற்று கொடியசைத்து விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
ஊர்வலத்துக்கு வட்டார மேற்பார்வையாளர் ஜெயசீலி தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை வசந்தா, ஆசிரியர் பயிற்றுனர்கள் வடிவேல், சங்கரி, ஒருங்கிணைப்பாளர் மணிக்குமார், சிறப்பு ஆசிரியர்கள் பாரத ரத்னா, குமாரி, கவிதா, சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவர் பாஸ்கர் வரவேற்றார்.
ஊர்வலத்தில் வட்டார கல்வி அலுவலர்கள் துரையரசு, கமலக்கண்ணன், பள்ளி ஆய்வாளர் பாபு மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள், பெற்றோர், பள்ளி மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.
ஆரணி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கிய விழிப்புணர்வு ஊர்வலம் முக்கிய வீதிகளில் சென்றது.