மத்திய பா.ஜ. அரசை கண்டித்து திருவள்ளூரில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
மத்திய பா.ஜ.அரசை கண்டித்து திருவள்ளூரில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
HIGHLIGHTS
எல். ஐ. சி. மற்றும் எஸ்.பி.ஐ. வங்கிகளில் உள்ள மக்கள் பணத்தை அதானி நிறுவனத்திற்கு முறைகேடாக கடன் வழங்கிய மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து திருவள்ளூர் அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
எல். ஐ. சி. மற்றும் எஸ்.பி.ஐ. வங்கிகளில் உள்ள மக்கள் பணத்தை அதானி நிறுவனத்திற்கு முறைகேடாக மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு வழங்கி உள்ளது.இதன் மூலம் அதானி குழுமம்.இந்திய பங்கு சந்தையில் மிகப்பெரிய அளவில் மோசடியில் ஈடுபட்டுள்ளது. இதனை அமெரிக்காவின் ஹிண்டன் பர்க் என்ற ஆராய்ச்சி நிறுவனம் வெளிப்படுத்தியது.
இதுபற்றி உச்சநீதிமன்ற நீதிபதியின் கண்காணிப்பில் விசாரணை கமிஷன் வைக்க வேண்டும், இதுபற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சியில் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதன் காரணமாக நாடாளுமன்றம் இரு நாட்களாக முடங்கி போய் உள்ளது.
மேலும் இந்த பிரச்சினைக்காக நாடு முழுவதும் பிப்ரவரி 6ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் காங்கிரஸ் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வடக்கு மாவட்ட தலைவர் ஏ. ஜி .சிதம்பரம் தலைமையில் திருவள்ளூர் ஜே.என். சாலையில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கி எதிரில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மத்திய மோடி அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.
இந்நிகழ்வில் ஏகாட்டூர் ஆனந்தன், மோகன் தாஸ், அருண்மொழி, அஸ்வின் குமார், வெங்கடேஷ், அமுதம், இளங்கோவன், சரவணன், பூண்டி ராஜா, உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.