திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் தற்கொலை
மதுரவாயலில் திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை; மாத்திரை சாப்பிடவில்லை என பெற்றோர் திட்டியதால் நேர்ந்த சோகம்.
HIGHLIGHTS
மதுரவாயல் அடுத்த நூம்பல், செல்வ கணபதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி இவருக்கு பிரபாவதி(25), என்ற பெண்ணுடன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கருப்பசாமி ராமாபுரத்தில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்று விட்டு நேற்று காலையில் வீட்டிற்க்கு வந்து பார்த்தபோது பிரபாவதி வீட்டில் தூக்கு போட்டு இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கபட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இறந்து போன பிரபாவதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் பிரபாவதிக்கு தைராய்டு பிரச்சனை இருப்பதால் மாத்திரை சரிவர சாப்பிடவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கருப்பசாமி அவரது மாமியாரிடம் தெரிவித்ததையடுத்து பிரபாவதியின் தாய் தனது மகளை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பிரபாவதி தற்கொலை செய்துகொண்டிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் திருமணமாகி 6மாதங்கள் ஆவதால் ஆர்டிஓ விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.