கேம்பலாபாத் அருகே 8.4 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் காருடன் கைது
கேம்பலாபாத் பகுதியில் காரில் கடத்திய 8 கிலோ 400 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
HIGHLIGHTS

கஞ்சா கடத்திய காருடன் பிடிபட்டவர்கள்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் மேற்பார்வையில் ஆழ்வார்திருநகரி காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) லெட்சுமிபிரபா தலைமையில் உதவி ஆய்வாளர்கள் அடங்கிய தனிப்படையினர், கேம்பலாபாத் பேருந்து நிறுத்தம் அருகே வாகனச்சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தனிப்படையினர் மேற்கொண்ட விசாரணையில், ஸ்ரீவைகுண்டம் கீழகோட்டை வாசல் தெருவை சேர்ந்தவர்களான மந்திரமூர்த்தி மகன் சங்கரன் (எ) சங்கரசுப்பு (26), மாரிமுத்து மகன் ராமசாமி (26) மற்றும் பரமசிவன் மகன் நம்பிகணேஷ் (27) என்பதும், காரில் சட்டவிரோதமாக கஞ்சா கடத்தியதும் தெரியவந்தது.
மூவரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த 8 கிலோ 400 கிராம் கஞ்சாவையும், கடத்துவதற்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். இது குறித்து ஆழ்வார்திருநகரி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.