தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை; உறவினர்கள் மறியல்
திருவண்ணாமலை அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதை தொடர்ந்து, உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
HIGHLIGHTS
தச்சம்பட்டு அருகே மனைவி, மைத்துனர் அவதூறாக திட்டி மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியதால், அவமானம் தாங்காமல் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். அவரது உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தச்சம்பட்டு அருகே உள்ள தலையாம்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் தாமோதரன். கூலி தொழிலாளி. இவரை இவரது மனைவி தமிழரசி மற்றும் மைத்துனர் சுரேஷ் என்ற ஏழுமலை ஆகியோர் அவதூறாக திட்டி, மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் மனைவி மற்றும் மைத்துனர் ஆகியோர் வீட்டிலிருந்த நகை பணம் சான்றிதழ் உள்ளிட்டவைகளை எடுத்து சென்றதாகவும் கூறப்படுகிறது.
இதனால் அவமானம் தாங்காத கூலித்தொழிலாளி தாமோதரன், வீட்டின் பின்பக்கத்தில் இருந்த மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தன் தந்தையின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த தனது தாயார் தமிழரசி தன்னுடைய மாமா சுரேஷ் என்கின்ற ஏழுமலை உள்ளிட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தச்சம்பட்டு காவல் நிலையத்தில் தாமோதரனின் 16 வயது மகன் புகார் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தாமோதரனின் உடலை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, அங்கு பரிசோதனை முடிந்து சொந்த ஊரான தலையாம் பள்ளம் கொண்டு வந்தனர்.
அப்பொழுது உயிரிழந்த தாமோதரன் உடலுடன், உறவினர்கள் தாமோதரனின் மகன் ஆகியோர் தச்சம்பட்டி பஸ் நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அவர்கள் தாமோதரன் உயிரிழப்புக்கு காரணமான அவரது மனைவி தமிழரசி மற்றும் மைத்துனர் சுரேஷ் என்கின்ற ஏழுமலை ஆகிய இருவரையும் கைது செய்யக்கோரி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறோம் எனக்கூறி போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி, கூட்டத்தை கலையச் செய்தனர்.. இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.