காணும்பொங்கல்: சாத்தனூர் அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
காணும்பொங்கலை முன்னிட்டு சாத்தனூர் அணையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர், சுற்றுலாப் பயணிகள் மது பாட்டில்கள் எடுத்துவர தடை
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்டத்தின் மிக சிறந்த பொழுதுபோக்கு சுற்றுலா தலமாக சாத்தனூர் அணை அமைந்திருக்கிறது. சாத்தனூர் அணையின் மொத்த கொள்ளளவு 119 அடியாகும். சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக இந்த அணை தற்போது முழு கொள்ளளவு நிரம்பி காட்சியளிக்கிறது. மிக பிரமாண்டமான பரப்பளவில், இயற்கை செழுமை மிக்க மலை பகுதியில் அமைந்துள்ள இந்த அணை பொன் விழா கண்ட சிறப்புக்குரியது. இங்கு, ஆயிரக்கணக்கான சினிமா படப்பிடிப்புகள் நடந்துள்ளன.
எழில் நிறைந்த மலர் பூங்காக்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு வசதிகள், படகு சவாரி, மீன் கண்காட்சி, முதலை பண்ணை என சுற்றுலா பயணிகளை கவரும் அம்சங்கள் நிறைந்துள்ளன. எனவே, விழா நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள், சாத்தனூர் அணைக்கு சுற்றுலா செல்வது வழக்கம்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் காணும் பொங்கல் அன்று பொதுமக்கள் சாத்தனூர் அணைக்கு அதிக அளவில் செல்வார்கள். இந்த நிலையில் இன்று காணும் பொங்கலை யொட்டி பல்வேறு ஊர்களில் இருந்து சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தினருடன் சாத்தனூர் அணைக்கு வந்திருந்தனர். இதனால் சாத்தனூர் அணை பகுதியில் எங்கு பார்த்தாலும் பொதுமக்களின் தலையாகவே காட்சியளித்தது. சிலர் வீடுகளில் இருந்து உணவு கொண்டு வந்து குடும்பத்துடன் சாப்பிட்டு மகிழ்ந்தனர். சிலர் அங்கேயே சமைத்து சாப்பிட்டனர்.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பூங்காவில் ஊஞ்சல் ஆடியும், சறுக்கியும் விளையாடினர். படகு சவாரியும் நடந்தது. மேலும் சாத்தனூர் அணையில் உள்ள முதலை பண்ணையையும் சுற்றி பார்த்தனர். பொதுமக்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
காணும் பொங்கலை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து சாத்தனூர் அணைக்கு 30 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
மேலும், சமூக விரோதிகள் குடித்து விட்டு சுற்றுலா பயணிகளிடம் தகராறு செய்வதை தடுக்கும் வகையில் சாத்தனூர் அணைக்கு மதுபாட்டில்கள் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டிருந்தது.
சந்தேகத்துக்குரிய நபர்களை சோதனை செய்த பின்பே அணைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். சுற்றுலா பயணிகளின் வசதிக்காக காலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை அணை திறந்து இருக்கும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.