நுழைவு வாயிலை மூடி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்
திருவண்ணாமலையில் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரியின் நுழைவு வாயிலை மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
HIGHLIGHTS
செமஸ்டர் தேர்வு கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி திருவண்ணாமலையில் கலைஞர் கருணாநிதி அரசு கலை கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரியின் நுழைவு வாயிலை மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ளது கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி. இந்தக் கல்லூரியில் காலை, மாலை என இரு சுழற்சி வேலைகளிலும் திருவண்ணாமலை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து சுமார் 5,000 த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் இந்த கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை சேர்ந்த மாணவ மாணவிகள் செமஸ்டர் தேர்வு கட்டணங்களை திருவள்ளுவர் பல்கலைக்கழகம் பல மடங்கு உயர்த்தியதாக குற்றம் சாட்டியும், அதே வேளையில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மதிப்பெண்கள் குறைத்து போட்டதாகவும் மாணவர்கள் கடந்த இரண்டு மாத காலமாக கல்லூரி வாயிலின் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு ஆர்ப்பாட்டங்களை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் தேர்வு கட்டணத்தை குறைக்காமலும், மதிப்பெண்கள் குறித்து எவ்வித தகவலும் தெரிவிக்கவில்லை என கூறி நேற்று இந்திய மாணவர் சங்கம் சார்பில் திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி வாயில் முன்பு ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து ஒன்று திரண்டு கல்லூரி நுழைவு வாயிலை அடைத்தனர். பின்னர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை எதிர்த்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாக்குவாதம்
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பலனளிக்காததால் கல்லூரியின் வாயிற் கதவை திறக்க முயற்சித்த பொழுது மாணவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
காவல்துறையினரை எதிர்த்து திடீர் சாலை மறியல்
அதை தொடர்ந்து இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் மற்றும் மாவட்ட செயலாளர் இழத்து சென்று காவல்துறையின் வாகனத்தில் ஏற்றியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கல்லூரி மாணவ மாணவிகள் காவல்துறையினரின் வாகனத்தை மறித்து செங்கம் சாலையில் தரையில் அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற போராட்டத்தில் இறுதியில் காவல் துறையினர் வாகனத்தில் இருந்த இந்திய மாணவர் சங்கத்தின் நிர்வாகிகளை இறக்கி விட்டதை தொடர்ந்து மறியல்போராட்டம் கைவிடப்பட்டது.
இது குறித்து பேசிய மாணவர்கள், திருவள்ளுவர் பல்கலைக்கழகம் தொடர்ந்து மாணவர்களை அலைகழித்து வருவதுடன், மறு கூட்டலுக்கு பணம் செலுத்தி விண்ணப்பித்த பொழுதும் தங்களுக்கு பூஜ்ஜியம் மதிப்பெண் வருவதாகவும் குற்றம் சாட்டும் அவர்கள்,
தாங்கள் கல்லூரிக்கு குடும்ப சூழ்நிலையால் மிகுந்த சிரமப்பட்டு வரும் நிலையில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் முன்னறிவிப்பு இன்றி தங்களை கல்வியில் நசுக்குவது எந்த விதத்தில் நியாயம் என குற்றம் சாட்டும் அவர்கள் உடனடியாக பல்கலைக்கழகம் இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்காவிட்டால் தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவ மாணவிகளையும் ஒன்று திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.