கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர்
திருவண்ணாமலையில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நல திட்ட உதவிகளை அமைச்சர் வேலு வழங்கினார்.
HIGHLIGHTS
திருவண்ணாமலையில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நகரில் உள்ள 39 வார்டு பொதுமக்களுக்கும் நல திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை பொதுப்பணித்துறை அமைச்சரும் கழக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினருமான எ. வ. வேலு அவர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் நிகழ்ச்சி தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
இவ்விழாவிற்கு நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன் தலைமை வகித்தார். நகர மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன், துணைத் தலைவர் ராஜாங்கம், நகர நிர்வாகிகள் விஜயராஜ், சீனிவாசன், குட்டி புகழேந்தி , குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர மன்ற உறுப்பினர் பிரகாஷ் அனைவரும் வரவேற்று பேசினார்.
பொது மக்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றிய அமைச்சர் பேசுகையில், தமிழ்நாட்டினை ஐந்து முறை சிறப்பாக ஆண்டவர் தலைவர் கலைஞர். திருவண்ணாமலை என்பது ஒரு ஆன்மீக நகரம். உலகம் முழுவதும் இருந்தும் திருவண்ணாமலைக்கு ஆன்மீக பெருமக்கள் வந்து செல்கிறார்கள். அப்போது தொல்லியல் துறை அண்ணாமலையார் திருக்கோவிலை கையகப்படுத்த முனைந்தது. இதனால் திருவிழாக்கள் பூஜைகள் நின்று போகக் கூடிய அபாயம் ஏற்பட்டது. கோவில் ஒரு கண்காட்சி பொருளாக தான் இருந்திருக்கும். இந்த அண்ணாமலையார் திருக்கோவிலை மீட்டு தந்தது நமது தலைவர் கலைஞர் தானே.
நமது மாவட்டத்தில் உள்ள மக்கள் தலைவர் கலைஞர் மீது மிகுந்த அன்புடையவர்கள், நன்றி உணர்ச்சி உடையவர்கள். திருவண்ணாமலை கழகத்தின் கோட்டையாக விளங்குகிறது.
நோய் தீர்க்க வேலூருக்கும் பாண்டிச்சேரி மருத்துவமனைக்கு அலைந்து கொண்டிருந்த காலத்தை மாற்றி திருவண்ணாமலை மாவட்டத்திற்கு என தனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை தந்தது நமது கலைஞர் தானே.
நமது தலைவர் கலைஞர் நூற்றாண்டு விழா தற்போது கொண்டாடப்படுகிறது. தலைவரின் பிறந்த நாளை வெறும் கொண்டாட்டமாக இல்லாமல் பொதுமக்களுக்கு உதவும் வகையில் நல உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது.
நமது திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து தமிழ்நாட்டு மக்களுக்கு அயராமல் பாடுபட்டு வருகிறார். அவரது கரத்தை வலுப்படுத்துவோம் என அமைச்சர் பேசினார்.
விழாவில் கழக மருத்துவர் அணி துணைத்தலைவர் எ. வ. வே. கம்பன், நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், சட்டமன்ற உறுப்பினர்கள் கிரி, சரவணன், மாவட்ட துணை செயலாளர் பிரியா விஜய ரங்கன், மாவட்ட அமைப்பாளர்கள் நேரு, ஆறுமுகம், மற்றும் மாவட்டத் துணை அமைப்பாளர்கள், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள், நகர மன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட ஏராளமான ஒரு கலந்து கொண்டனர்.