ஏலச்சீட்டு மோசடி : தம்பதி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு..!
ஏலச்சீட்டு நடத்தி பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக, தம்பதி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கிராம மக்கள் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மனு கொடுத்தனா்.
HIGHLIGHTS
திருவண்ணாமலை அருகே ஏலச்சீட்டு நடத்தி பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக, தம்பதி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கிராம மக்கள் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மனு கொடுத்தனா்.
திருவண்ணாமலை அடுத்த சு ஆண்டாபட்டு கிராமத்தை சேர்ந்தவர் உண்ணாமலை. இவர் இசுக்கழி காட்டேரி கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் செல்வம். இவர் ராணுவத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.
அரசு பள்ளி ஆசிரியையான இவர் நடுபட்டு, இசுக்கழி காட்டேரி, ஆண்டாப்பட்டு ,அண்டம்பள்ளம், வானாபுரம், பவித்திரம், வலசை உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள கிராம மக்களை வாடிக்கையாளராக சேர்த்து சுமார் ஒரு லட்சம், இரண்டு லட்சம் ,ஐந்து லட்சம் என ஏல சீட்டும், மேலும் 500 க்கும் மேற்பட்டவர்களிடம் மாதம் 1000, 1200 வீதம் தீபாவளி சீட்டு நடத்தியதுடன் பல்வேறு நபர்களிடம் ஐந்து லட்சம், மூன்று லட்சம், முப்பத்தி ஆறு லட்சம், என சுமார் 5 கோடிக்கு மேல் பெற்று கொண்டு எவருக்கும் பணம் கொடுக்காமல் தற்போது கணவன் மனைவி ஆகிய இருவரும் தலைமறைவாக உள்ளன ராம்.
அரசுப்பள்ளி ஆசிரியை ஆன உண்ணாமலை அனைத்து கிராம மக்களையும் நம்ப வைத்து ஏல சீட்டில் சேர்த்ததுடன் ,ஏலம் எடுத்தவர்களுக்கு பணம் கொடுக்காமல் பலமுறை அலை கழித்து வந்துள்ளார்.
மேலும் தீபாவளி சீட்டிற்காக பணம் கட்டியவர்களுக்கு கால் பவுன் தங்க நகை, 20 கிராம் வெள்ளி ,இனிப்பு, காரம், பட்டாசு உள்ளிட்ட பொருட்களும் , 1200 ரூபாய்க்கு மேல் பணம் கட்டியவர்களுக்கு பவுன் தங்க காசு, வெள்ளி காசு, மளிகை பொருட்கள், பட்டாசு, இனிப்பு காரம் என்றும் கூறி வாடிக்கையாளர்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றி உள்ளார்.
தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கிராம மக்கள் அவரிடம் நேரில் சென்று கேட்டதற்கு தகாத வார்த்தைகளால் திட்டியும் கொலை மிரட்டலும் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த மாதம் கிராமத்தில் இருந்த வீடு மற்றும் தங்களுக்கு சொந்தமான நிலங்களை தங்களது உறவினர் பெயரில் மாற்றம் செய்து ஊரைவிட்டு காலி செய்து தலைமறைவாகியுள்ளனர் . அவரது செல்போனை தொடர்பு கொண்டு பேசும் வாடிக்கையாளர்களுக்கு பணம் கொடுக்க முடியாது என்று கொலை மிரட்டல் விடுத்ததால் செய்வதறியாத கிராம மக்கள் இன்று திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நேரில் வந்து கண்ணீர் மல்க பணத்தை பெற்று தரக் கோரி கோரிக்கை மனு அளித்தனர்.
ஏமாற்றிய இருவரும் அரசு ஊழியர்கள் அவர்களை நம்பி கோடிக்கணக்கில் பணத்தை இழந்து உள்ளோம் எங்களது பணத்தை எப்படியாவது மீட்டு தாருங்கள் என்று எஸ்பி அலுவலகத்தில் கண்ணீர் மல்க கிராம பொதுமக்கள் மனு அளித்ததை பார்த்து அங்கு இருந்தோர் மனதை சோகத்தில் ஆழ்த்தியது.