திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்று
Tiruvannamalai GH-திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு தேசிய அளவிலான என்ஏபிஎச் தரச்சான்று நாட்டிலேயே முதன்முறையாக வழங்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
Tiruvannamalai GH-திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்று (என்ஏபிஎச்) வழங்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் இந்த தரச்சான்றை பெறும் முதல் அரசு மருத்துவக் கல்லூரி என்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவமனையில் கிடைக்கும் சேவைகளின் தரத்தை பரிசோதித்து அதை உறுதி செய்யவும், சான்றளிக்கவும் 2006-ல் தேசிய மருத்துவமனை அங்கீகார வாரியம் ஏற்படுத்தப்பட்டது.
அந்த வாரியமானது மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையின் உள்கட்டமைப்பு மற்றும் மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட தகுதிகளை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில், தேசிய மருத்துவமனை அங்கீகார வாரியம் (என்ஏபிஎச்) தரச்சான்று வழங்கி வருகிறது.
இதுவரை உயரிய தனியார் மருத்துவமனைகள் மட்டுமே இந்த சான்று பெற்று வந்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு, இந்த ஆண்டு என்ஏபிஎச் தரச்சான்று பெறுவதற்கான முயற்சியில், தமிழ்நாடு அரசு ஈடுபட்டது. இதற்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் கன்னியாகுமரி, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் இந்த தரச்சான்றினை பெறுவதற்கு விண்ணப்பித்தன.
அதையொட்டி, பல்வேறு நிலைகளில் ஆய்வு குழுவினர் மருத்துவமனைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். அவ்வாறு நடத்தப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்ட குறைபாடுகள் உடனுக்குடன் சரி செய்யப்பட்டு மீண்டும் இறுதி கட்ட ஆய்வு சமீபத்தில் நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து, தேசிய தரச்சான்று பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு என்ஏபிஎச் தரச்சான்று வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மருத்துவக்கல்லூரி டீன் அரவிந்தன் கூறுகையில், இந்தியாவிலேயே முதன்முறையாக அரசு மருத்துவக்கல்லூரிக்கான தரச்சான்றினை திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பெற்று உள்ளது. திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நாளொன்று சுமார் 2500-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேபோல் உள்நோயாளிகளாக சுமார் 900 முதல் 1000 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கடந்த மாதத்தில் மட்டும் 1038 பிரசவம் பார்க்கப்பட்டு உள்ளது. திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் தேசிய மருத்துவமனை அங்கீகார வாரியம் மூலம் பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்கு பின் தரச்சான்று வழங்கப்பட்டு உள்ளது.
இந்த அரிய சிறப்பான அங்கீகாரம் பெற அறிவுரைகளையும், வழிகாட்டுதல்களையும் அளித்த தமிழ்நாடு அரசுக்கும், மருத்துவக் கல்வி இயக்குநருக்கும், மருத்துவ அதிகாரிகளுக்கும், அனைத்து பேராசிரியர்கள், மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள், மருத்துவம் சாரா பணியாளர்களுக்கும் நன்றிகளை தெரிவிக்கிறோம்
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தேசிய அளவிலான தரச்சான்று கிடைத்திருப்பதன் மூலம், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான கூடுதல் நிதி ஒதுக்கீடு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளது.
மேலும், இந்த மருத்துவமனை, மாநிலத்தின் மாதிரி அரசு மருத்துவமனையாக தரம் உயரும் என்று தெரிவித்தார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2